ETV Bharat / state

தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை பிரச்சாரம்? திமுக - பாஜகவினர் மோதல்.. கோவையில் களேபரம் - நடந்தது என்ன? - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 7:59 AM IST

Updated : Apr 12, 2024, 8:48 AM IST

DMK - BJP Clash: கோவையில் திமுக கூட்டணியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், திமுக மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த ஏழு பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

clash between bjp and dmk
திமுக பாஜக இடையே மோதல்

திமுக பாஜக இடையே மோதல்

கோயம்புத்தூர்: கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு, கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, இரவு 10 மணியைத் தாண்டி அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், இது தொடர்பாக அங்கிருந்த காவல்துறையினரிடம் தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10.40 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள எப்படி அனுமதி அளிக்கின்றீர்கள்? எனக் கேள்வியெழுப்பினர். இதையடுத்து, அங்கிருந்த பாஜகவினர், திமுக கூட்டணி கட்சியினர் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனால், அங்கு வந்த காவல்துறையினர் கூடியிருந்தவர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த களேபரங்களுக்கு இடையே, பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் அண்ணாமலையின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகத் தெரிகிறது.

இதனிடையே தங்களை தாக்கிய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, காயமடைந்த நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த திடீர் தாக்குதலில் திமுகவைச் சேர்ந்த மோகன்ராஜ், செல்லப்பா, ரங்கநாதன், சேகர், சதீஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசு ஆகியோருக்கு சிறிய காயம் ஏற்பட்ட நிலையில், மதிமுகவை சேர்ந்த குணசேகரன் என்பவரின் மார்பின் மீது தாக்கியதால், அவருக்கு மட்டும் அரசு மருத்துவமனையில் இசிஜி (EGC) எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், திமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தகவலறிந்து, முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நேரடியாக சம்பவ இடத்திற்குச் சென்று இதுகுறித்து கேட்டறிந்தனர். இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் காரணமாக, அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. தற்போது இந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வரட்டி சாணத்தால் தாக்கும் விநோத திருவிழா.. ஆந்திராவில் உகாதியை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்! - Ugadi 2024

Last Updated :Apr 12, 2024, 8:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.