நீலகிரி: உதகை நகர்மன்ற மாதாந்திர கூட்டம், அதன் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் இன்று (பிப்.22) நடைபெற்றது. அதில் 36 வார்டைச் சேர்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக எல்க்ஹில் பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் ரவி பேசும் போது, பல்வேறு இடங்களில் விதி மீறிய கட்டடங்கள் கட்டப்படுவதாகவும், தனியார் காட்டேஜ்கள் தண்ணீரை அதிக அளவு எடுத்து வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை எனக் குற்றம் சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மன்ற உறுப்பினர் ரஜினி, திமுக உறுப்பினர் தன்னுடைய பகுதியில் நடைபெறும் கட்டடப் பணிகளைக் குறி வைத்து குற்றம் சாட்டப்படுவதாகவும், தான் ஊழல் புரிந்ததாகக் கூறுகிறார் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் மாறி, மாறி ஒருமையில் பேசிக்கொண்டதால், நகர மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர், இதுபோன்ற கேள்விக்குத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதிலளிப்பார்கள், உறுப்பினர்கள் சபை நாகரீகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நகரமன்றத் தலைவர் துணைத்தலைவர் தெரிவித்தார். தற்போது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களே ஒருவரையொருவர் ஒருமையில் கடுமையான பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.