ETV Bharat / state

சுபிக்‌ஷா சுப்ரமணியன் வழக்கு விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 10:53 PM IST

madras high court
madras high court

Subhiksha subramanian case: குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நபர் தனக்கு எதிரான வழக்கை தானே வாதிட விரும்பினால் சிறையில் இருந்தவாறே வாதாட அனுமதிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை: குற்றவாளியாகச் சிறையில் அடைக்கப்பட்டவர், அவரது வழக்கில் தானே வாதிட விரும்பினால் சிறையில் இருந்தவாறே காணொலி மூலமாக வாதாட அனுமதிக்கலாம் என சுபிக்‌ஷா சுப்ரமணியன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

நிதி நிறுவனம் நடத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுபிக்‌ஷா நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.சுப்ரமணியன் குற்றவாளி என முடிவாகி, இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், சுபிக்‌ஷா சுப்ரமணியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தனக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சில வழக்குகளில் வழக்கறிஞரை நியமிக்காமல் தானே வாதிட விரும்பதாகவும், அதற்கு அனுமதியளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த வழக்குகளில் அவர் சொந்தமாக வாதிட விரும்புகிறார் என்ற விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதனிடையே, மனுதாரரின் கோரிக்கை படி அவராகவே வாதிட அனுமதிப்பதாக இருந்தால், நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து வாதிட அனுமதிக்கப்படுவதை விட, சிறையிலிருந்தே காணொலி மூலம் வாதிட அனுமதிக்கலாம் என்றும் கூறினர். மேலும், காணொலியில் ஆஜராகி வாதிட சிறைத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்ற உத்தரவு அவசியமில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.