ETV Bharat / state

நெல்லை ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; தனிநபரின் தலையீடு இருக்கக்கூடாது என மதுரை ஐக்கோர்ட் உத்தரவு! - High Court Madurai Branch

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 9:20 PM IST

Nellai Sri Muthumalai Amman Temple Case
Nellai Sri Muthumalai Amman Temple Case

Nellai Sri Muthumalai Amman Temple: நெல்லை ஸ்ரீ முத்துமாலை அம்மன் திருக்கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர்தான் நடத்த வேண்டும் எந்த தனிநபரின் தலையீடு இருக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பிரபல நடிகர் மீசை ராஜேந்திரநாத் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை முக்கூடல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாலை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த நிலையில் சிவப்பிரகாசம், பொன்னுராசு, மகேஷ்வரன், விஜய் சேகர் உள்ளிட்ட 4 தனிநபர்கள் கோயிலில் எவ்விதமான பொறுப்புகளிலும் இல்லை. இருந்தபோதிலும் இவர்கள் 4 பேரும், வருகின்ற மே 19ஆம் தேதி ஸ்ரீ முத்துமாலை அம்மன் திருக்கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்வதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலித்து வருகின்றனர்.

கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்வதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னெடுக்காமல் இந்த நால்வரும் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித பதிலும் இல்லை. ஆகவே, நெல்லை மாவட்டம் முக்கூடல் ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் நடத்த வேண்டும்

மேலும், முகூடல் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம், பொன்னுராசு, மகேஷ்வரன், விஜய் சேகர் உள்ளிட்ட தனி நபர்களின் தலையீடு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் அருள்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், "ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டு விட்டது. தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் சார்பிலேயே கும்பாபிஷேக நிகழ்வு நடத்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், "முக்கூடல் ஸ்ரீ முத்துமாலை அம்மன் திருக்கோயிலின் செயல் அலுவலரே கும்பாபிஷேக நிகழ்வை நடத்த வேண்டும். எந்த தனி நபரின் தலையிடும் இருக்கக்கூடாது" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க: அருணாச்சலேஸ்வரர் கோயில் தொடர்பான வழக்கு; சிறப்பு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.