ETV Bharat / state

அரசுப் பேருந்து மீது மீது கார் மோதி விபத்து; மூதாட்டி உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 9:22 AM IST

A car collided with a government bus
அரசு பஸ் மீது கார் மோதி விபத்து

Tiruvannamalai Accident: சேத்துப்பட்டு - போளூர் சாலையில் அரசுப் பேருந்து மீது கார் டயர் வெடித்து மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை: கலசபாக்கம் அடுத்த அலங்காரமங்கலம் பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் சாமிகண்ணு. இவரது மனைவி விஜயலெட்சுமி, உடல்நலக்குறைவால் சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது வீட்டிற்குச் செல்ல பாடகம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் பாலாஜி (23) ஓட்டிய காரில் சென்றுள்ளனர். மேலும் காரில் விஜயலெட்சுமி (43), விஜயலெட்சுமியின் தாய் மல்லிகா (60), மகள் வித்யா (23) ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது கார் சேத்துப்பட்டு - போளூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கிழக்கு மேடு கருங்கல்மேடு அருகே காரின் டயர் திடீரென வெடித்துள்ளது.

எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே போளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்து, பின்னர் காயமடைந்த நபர்களை உடனடியாக மீட்டு, சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் படுகாயமடைந்த அவர்களுக்கு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் மல்லிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ஓட்டுநர் பாலாஜி வேலூர் அரசு மருத்துவமனைக்கும், விஜயலெட்சுமி மற்றும் வித்யா ஆகிய இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, காரில் வரும் போது எதிர்பாராத விதமாக நேர்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் இரண்டு துண்டுகளான புதிய வீடு.. பொதுப்பணித்துறையின் கவனக்குறைவு தான் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.