ETV Bharat / state

கோவைக்கு பிரதமர் மோடி வரவிருக்கும் நிலையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 4:46 PM IST

கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Bomb threat to school in Coimbatore: கோவையில் நடக்கும் வாகன பேரணியில் (Road Show) பிரதமர் மோடி இன்று பங்கேற்க உள்ள நிலையில், அங்குள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: கோவை, சாய்பாபா கோயில் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் வரையில் நரேந்திர மோடியின் வாகன பேரணி நிகழ்ச்சி இன்று (மார்ச்.18) நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி வருகையையொட்டி, கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன பேரணி நடத்தும் பகுதி முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதன்படி, கோவைக்கு இன்று மாலை பாஜக சார்பில் நடைபெறும் வாகன பேரணியில் பங்கேற்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். பிரதமர் வருகையையொட்டி கோவை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்காநல்லூர் சாலை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், இன்று (மார்ச்.18) காலை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. இதனிடையே அந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர், காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர் பள்ளி வளாகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில், சந்தேகத்திற்கும் இடமான வகையில் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. எனவே, பொய்யாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மதியத்திற்குப் பிறகு வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்பட்டுக் காவல் துறையினர் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர். பள்ளியில் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டலினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறி பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பதால் அச்சப்படத் தேவையில்லை என்று கூறி பெற்றோர்களைச் சமாதானப்படுத்தினர். கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் வாகன பேரணி நடைபெற உள்ள நிலையில், பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோவையில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் வந்த நிலையில், தற்போது மீண்டும் இங்குள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி வாகன பேரணி.. 5 ஆயிரம் போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.