ETV Bharat / state

"அண்ணாமலைக்குக் கொடுக்கப்பட்ட தேர்தல் அசைன்மென்ட் தான் கச்சத்தீவு பிரச்சினை" - நாம் தமிழர் கட்சியினர் தாக்கு! - NTK ON Kachchatheevu issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 8:22 PM IST

Updated : Apr 2, 2024, 10:48 PM IST

NTK ON Kachchatheevu issue
NTK ON Kachchatheevu issue

NTK ON Kachchatheevu issue: உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் கச்சத்தீவு வழக்கை நடைமுறைக்குக் கொண்டு வராத மத்திய அரசு தனது ஆதாயத்திற்காக அரசியலாக்கி வருகிறது என நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோயம்புத்தூர்: கோவை ஆடீஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் கோவை,பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கலாமணி ஜெகநாதன், டாக்டர் சுரேஷ் குமார் மற்றும் வழக்கறிஞர் பாசறை மாநில துணைத் தலைவர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அப்போது நாதக மாநில துணைத் தலைவர் ஆனந்தராஜ் பேசுகையில், "ராஜீவ் காந்தி கொலை வழக்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. விடுதலை செய்யப்பட்டவர்கள் இலங்கை செல்ல உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கச்சத்தீவு பிரச்சனை தகவல் அறியும் உரிமைச் சட்டம் கீழ் அண்ணாமலை வாங்கி உள்ளார். தேர்தல் பத்திரம் முறைகேடு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகத் தான் வெளிவந்தது.

இந்த தகவலைப் பெறப் பல ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில், அண்ணாமலை கச்சத்தீவு குறித்து உடனடியாக தகவல்களைக் கேட்டு வாங்கி உள்ளார். இது அரசியலுக்காகவும்,வாக்குகள் பெறவும் கச்சத்தீவு பிரச்சினை கொண்டு வந்துள்ளனர். மீனவர்கள் மீது உள்ள அக்கறையில் செய்யவில்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரம் தொடர்பாக 21 முறை ஸ்டாலினுக்குப் பதில் அளித்துள்ளேன் என கூறி இருக்கிறார்.

நூறு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக, மீனவர்கள் மற்றும் தனிநபர் ஒருவர் என 4 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பாஜக அரசு பத்து ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்தது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தீர்வு அளிக்க வேண்டும். பதில் மனு அளிக்கக் கூடாது. இலங்கைக்குப் பிரதமர் மோடி, அண்ணாமலை, நிர்மலா சீதாராமன் ஆகியோர் சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளனர்.

அப்போது இது பற்றி எல்லாம் பேசவில்லை. இப்போது தேர்தல் என்பதால் பேசி வருகின்றனர். காலியான பெருங்காய டப்பா வைத்துத் தான் பாஜகவினர் பேசி வருகின்றனர். இலங்கைக்குள் சீனா அரசு ஊடுருவி 200 ஏக்கர் 99 ஆண்டுக் குத்தகை எடுத்து உள்ளது. இலங்கையின் அனைத்து கிராமங்களிலும் உள்ளனர். மாலத்தீவிலும் சீனா ஊடுருவி உள்ளது. இதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாஜக அரசு தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து வருகிறது. உச்சநீதிமன்றம் கச்சத்தீவு குறித்த வழக்கில் ஆதரவாக அரசு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியா கிரிக்கெட்டில் இலங்கையை வென்றது. அதற்கு பலிவாங்கும் நடவடிக்கையாக விக்டர், அந்தோணி தாஸ், ஜான்பால், மாரிமுத்து உள்ளிட்ட நான்கு மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக, இலங்கை கடற்படை, துன்புறுத்திக் கொன்றது. அவர்களின் உடல் கரை ஒதுங்கியது.

இதுவரை 147 எப்ஐஆர் இலங்கை கடற்படை மீது போடப்பட்டுள்ளது. இதுவரை ஒரு நடவடிக்கையையும் இந்திய அரசு எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். சிங்களவர்கள் ஒரு போதும், இந்தியாவிற்கும் தமிழர்களுக்கும் எதிராகத்தான் இருப்பார்கள். ஆதரவாக இருக்க மாட்டார்கள். இலங்கை அரசு சீனாவுக்குத் தலையையும், இந்தியாவுக்கு வாலையும் காட்டிக்கொண்டு இருக்கிறது. கச்சத்தீவு 220 ஏக்கர் 20 செண்ட் நிலம் மட்டுமே உள்ளது. அது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருக்கிறது.

மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அங்கு பாஜக என்ன செய்தது. மேகதாது கட்டினால் தமிழகம் பாலைவனம் ஆகும். அண்ணாமலை இதில் பாஜக நிலைப்பாடு குறித்துச் சொல்ல வேண்டும். மேலும், அண்ணாமலைக்குக் கொடுக்கப்பட்ட தேர்தல் அசைன்மென்ட் தான் கச்சத்தீவு பிரச்சினை. இன்னும் தேர்தலுக்கு 15 நாள் தான் இருக்கிறது. அதற்குள் கச்சத்தீவு பிரச்சினையில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மேலும், இலங்கைப் படுகொலை வெளி விவகாரத்துறை தமிழருக்கு எதிராக உள்ளது. இலங்கைக்கு மோடி, நிர்மலா சீதாராமன், அண்ணாமலை சென்று வந்த போது அங்கு என்ன செய்தார்கள், யாருடன் என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் வெளியிட வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும், மீனவர்கள் பக்கம் நின்று கச்சத்தீவு பிரச்சனைக்குத் தீர்வு சொல்ல வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: "பாஜகவைப் பற்றி பேச மாட்டோம், திமுக தான் குறி" - அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் சொல்லும் காரணம்! - South Chennai Candidate Jeyavardhan

Last Updated :Apr 2, 2024, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.