ETV Bharat / state

பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்து; எச்.ராஜாவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 6:07 PM IST

சென்னை
சென்னை

H.Raja: பெண்களுக்கு எதிராக அவதூறு கருத்து மற்றும் பொது அமைதியை குலைக்கும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உள்பட திமுக நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் காவல்துறை, எச். ராஜா மீது பெண்களுக்கு எதிராக அவதூறாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து, சென்னையில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பாக இன்று (மார்ச் 5) விசாரணைக்கு வந்தது.

அப்போது எச். ராஜா நேரில் ஆஜராகி, நான் தவறான கருத்தை பரப்பவில்லை என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை மார்ச் 20ஆம் தேதிக்கு நீதிபதி ஜெயவேல் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மீதான சூமோட்டோ வழக்கு விசாரணை தள்ளிவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.