ETV Bharat / state

''மரியாதைக்காக அமைதியாக உள்ளோம். மீண்டும் 29 பைசா என கூறினால், நாங்கள் டிரக் உதயநிதி என கூறுவோம்'' - அண்ணாமலை பதிலடி! - Annamalai about seeman

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 4:32 PM IST

Updated : Apr 3, 2024, 6:26 PM IST

அண்ணாமலை பேச்சு
மீண்டும் 29 பைசா என கூறினால், நாங்கள் டிரக் உதயநிதி என கூறுவோம்

Annamalai criticized DMK: கச்சத்தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ தகவல் பொய் என்று திமுக அமைச்சர் கூறுகிறார்கள், நான் தான் இரவு டைப் பன்னி ஜெராக்ஸ் எடுத்தாக கூறுகின்றனர், இந்த அளவிற்குத் தான் அவர்களின் பொது அறிவு உள்ளது என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசியுள்ளார்.

''மரியாதைக்காக அமைதியாக உள்ளோம். மீண்டும் 29 பைசா என கூறினால், நாங்கள் டிரக் உதயநிதி என கூறுவோம்'' - அண்ணாமலை பதிலடி!

கோயம்புத்தூர்: கச்சதீவு தொடர்பாக திமுக தான் மேடைகளில் பேசினார்கள், ஆனால் இப்போது ஏன் திமுக கச்சதீவு என்றால் பதறுகிறது என் இன்று (ஏப்.03) கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் இணைந்து இன்று (ஏப்.03) பிரச்சாரம் மேற்கொண்டு, ஆதரவு திரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தெப்பக்குளம் மைதானம் பகுதியில் பிரச்சாரம் முடித்த அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன், செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, "தேர்தல் களம் எப்படி சூடாக இருக்கிறதோ அதேபோல கோவையும் சூடாக இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (ஏப்.04), நாளை மறுநாள் (ஏப்.05) தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகிறார்.

நாளை மதியத்திற்கு மேல், தேனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து மதுரையில் பாஜக வேட்பாளர் ராமசீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

பின்னர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு நாளை, மறுநாள் (ஏப்.04,05) சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மூன்று பாராளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு விட்டு, கேரளா செல்ல உள்ளேன். பிரதமரின் வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை, குறுகிய காலத்தில் வரவுள்ளார், பிரதமர் வருகை உறுதியான பின்பு அதிகாரப்பூர்வமாக தகவல் அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

சீமான் தன் தவறை மறைக்க எங்கள் மீது பழி போடுகிறார்: தொடர்ந்து சீமான் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “சீமான் அவர்கள் தினம் ஒரு வார்த்தை தினம் ஒரு தத்துவம் என அரசியல் செய்து வருகிறார். நேற்று முன் தினம் சீமானின் சிலீப்பர் செல் அண்ணாமலை என்றார்கள், இன்று ஏதோ சொல்லியுள்ளார். சீமான் தேர்தல் ஆணையத்தை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள்.

அவர் சரியான நேரத்தில் விண்ணப்பிக்காமல், தன் தவறை மறைப்பதற்காக பாஜக மற்றும் என் மீதும் குற்றம் கூறுவதை எவ்வாறு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். சென்னை வெள்ளத்தைக் காரணம் கூறுகிறார்கள், ஏன் டி.டி.வி.தினகரனுக்கு சென்னை வெள்ளம் வரவில்லையா?, ஜி.கே.வாசனுக்கு வெள்ளம் வரவில்லையா?, அவர்கள் அதே குறிப்பிட்ட நேரத்தில் தான் விண்ணப்பித்தனர், அவர்களுக்குச் சின்னம் கிடைத்தது.

சீமான் விண்ணப்பிக்கவே இல்லை, அதற்குள் வேறு நபர் அதனை விண்ணப்பித்து வாங்கிவிட்டார். அவரும் பத்திரிக்கையாளரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். இதில் பாஜக, அண்ணாமலை எங்கு வந்தார்கள், லாஜிக் இல்லாத கேள்விக்கு என்ன சொல்வது, அவரது தவறை மறைக்க எங்கள் மீது பழி போட்டால் எப்படி” என்றார்.

முதல்வரை ரோடு ஷோ வாகன பேரணி வரச்சொல்லுங்கள்: தமிழக முதல்வர் அப்போது தமிழகத்தில் எட்டிப்பார்க்கிறார், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றதால் ஏதேனும் முதலீடு வந்ததா என்றால் இல்லை, முதல்வர் தமிழகத்திற்கு வராததால் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மக்கள் பணத்தை எப்படிக் கொள்ளையடிக்கலாம் என வேலை செய்து வருகிறார்கள்.

முதல்வர் வீதிக்கு வந்து பார்த்தால் தெரியும் மக்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்று. தமிழக முதல்வர் ஏதாவது ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து ரோடு ஷோ வாகன பேரணி வரச்சொல்லுங்கள், எத்தனை பேர் முதல்வரைப் பார்க்க வருவார்கள் என்று பார்க்கலாம், சவால் விடுகிறேன்.

அமிர்த்ஷா ரோடு ஷோ நிகழ்ச்சி தேனியில் நடைபெற உள்ளது, மீண்டும் பிரதமரின் ரோடு ஷோ நிகழ்ச்சி முக்கியமான நகரில் நடைபெற உள்ளது. இதன் மூலம் 3 மணி நேரம் வாகனத்தில் நின்றவாறு மக்களைச் சந்திக்கிறார்கள், முதல்வர் வந்தால் தமிழக மக்களின் கோபம் தெரியும். பிரதமர், முதல்வர் உழைப்பைப் பார்த்து மக்களே முடிவு செய்யட்டும்.

தேர்தல் முன்பு சனாதனம் பேசுகிறீர்கள், பிறகு பட்டையைப் போட்டுக்கொள்கிறீர்கள்: திமுக 2021 தேர்தலுக்கு முன் வேல்-ஐ எடுத்துக்கொண்டு சுற்றினார்கள், ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி வேல்-ஐ தூக்கினார்கள். ராஜா அவர்கள் சனாதன தர்மம், ராம பக்தர், அயோத்தியா சென்றேன் என கூறுகிறார். ஜனநாயகத்தின் பெரிய வியாதி என்னவென்றால் மறதி தான். உண்மையாகச் சனாதனத்தை எதிர்த்தால், முழுமையாக எதிர்ப்பு தெரிவியுங்கள், தேர்தல் முன்பு சனாதனம் பேசுகிறீர்கள், பிறகு பட்டையைப் போட்டுக்கொள்கிறீர்கள்.

ஏன் திமுக கச்சத்தீவு என்றால் பதறுகிறது: கச்சத்தீவு விவகாரம் பாஜக கையில் எடுத்த பிறகு மக்களுக்குத் தெரிந்துள்ளது. ஆர்.டி.ஐ தகவல் பொய் என்று திமுக அமைச்சர் கூறுகிறார்கள், அண்ணாமலை இரவு டைப் பன்னி ஜெராக்ஸ் எடுத்தா வைக்க முடியும். இந்த அளவிற்குத் தான் அவர்களின் பொது அறிவு உள்ளது. கச்சத்தீவு தொடர்பாக திமுக தான் மேடைகளில் பேசினார்கள். இப்போது ஏன் திமுக கச்சத்தீவு என்றால் பதறுகிறது.

நாங்கள் ஜனநாயக கடமையைச் செய்துள்ளோம். தந்தை, தாத்தா பெயரை வைத்து அரசியலுக்கு வந்தவர்கள் இந்த மாதிரி கொச்சையாகத் தான் பேசிவருகிறார். அதில் இந்தியாவில் கொச்சையாகப் பேசுவதில் முதலிடத்தில் வருபவர் உதயநிதி ஸ்டாலின். பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார், அவரது நண்பர்களுடன் அறைக்குள் பேச வேண்டியதை வெளியே பேசுகிறார். தமிழக மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

29 பைசா என உதயநிதி கூறினால், நாங்கள் டிரக் உதயநிதி என கூறுகிறோம்: உதயநிதியின் பெயர் பியர், டாஸ்மாக், சாராயம், டிரக். நாளை முதல் நாங்கள் டிரக் உதயநிதி என கூறுகிறோம். மரியாதைக்காக நாங்கள் அமைதியாக இருக்கிறோம். மீண்டும் 29 பைசா என உதயநிதி கூறட்டும், நாங்கள் டிரக் உதயநிதி என கூறுகிறோம். பொன் ஆர் தலைமையில் குழு சென்று கச்சத்தீவு இந்தியாவிற்கு வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளது மட்டுமே எங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. மேலும் ஜெய்சங்கர் கூறும் போது அனைத்து வழிமுறைகள் நம்மிடம் உள்ளது என தெரிவித்தார்.

கச்சத்தீவு விவகாரத்தில் சென்சிடிவாக கையாண்டு வருகிறோம், 1974 ல் மோசமாகக் கையாண்டது, இந்திரா காந்தி அரசு, அன்று அவ்வாறு கையாண்டுவிட்டு இப்போது நாங்கள் பேசுவதை சென்சிடிவ் என கூற அவர்களுக்கு என்ன தார்மீகம் உள்ளது. அன்று எதற்காக இந்திய எல்லை சுருக்கிக்கொண்டீர்கள், தாரைவார்த்துக் கொடுத்தீர்கள், இன்று கேள்வி கேட்டால், பிரச்சனை வருமா?, இந்தியா - சீனா போர் தொடர்பாகக் கேட்டால் ஒரு தகவல் வரும், அதிகாரப்பூர்வ ஆவணமாகக் கேட்டால் ஆவணங்களுடன் வரும். இன்று கச்சத்தீவு ஆவணங்கள் வந்துள்ளது. இந்த ஆவணங்கள் வரும் வரை அரசு அதிகாரி கூட பார்க்க முடியாது.

நான் வானதி அக்கா என்று தான சொன்னேன், அம்மா என்று சொல்லவில்லையே: பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது வானதி ரியாக்சன் டிரெண்ட் ஆவது குறித்துக் கேட்ட போது, “நாங்கள் எப்போது இதே போல அக்கா, தம்பியாகப் பேசிக்கொள்கிறோம், நான் வானதி அக்கா என்று தான சொன்னேன், அம்மா என்று சொல்லவில்லையே.

கோவை மட்டுமல்ல பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு ஆகிய அனைத்து பகுதிகளில் பாஜக வெற்றி பெரும், நீலகிரி வேட்பாளர் முருகன் வேட்புமனு தாக்கல் செய்த அன்றே வெற்றி பெற்றுவிட்டார். மொழிப்போர் தியாகிகளின் குழந்தைகள் இப்போது என்ன செய்கிறார்கள் என திமுக வெள்ளையறிக்கை கொடுக்க வேண்டும், அவர்கள் எவ்வளவு கொடுமையாக வாழ்கிறார்கள் என ஆவணப்படம் வெளியிடுகிறோம். திமுகவினர் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள். 1965 ல் இந்தியைத் திணித்தது காங்கிரஸ், அவர்களுடன் கூட்டணியில் ஏன் இருக்கிறீர்கள்”, என பேசியுள்ளார்.

இதையும் படிங்க: "தேர்தலுக்காக பாஜக போடும் வேஷம் எதுவும் பெரியார் மண்ணில் எடுபடாது" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காட்டம்! - Lok Sabha Election 2024

Last Updated :Apr 3, 2024, 6:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.