ETV Bharat / state

தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்த கிளி பறிமுதல்.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 4:11 PM IST

Thangar Bachan astrology parrot: கடலூர் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோசியர் கைது செய்யப்பட்டு, கிளிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்த கிளி பறிமுதல்
தங்கர் பச்சானுக்கு ஜோசியம் பார்த்த கிளி பறிமுதல்

கடலூர்: கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் இயக்குநர் தங்கர் பச்சான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி, கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியப் பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, தென்னம்பாக்கம் என்ற பகுதியில் உள்ள அழகுமுத்து அய்யனார் கோயிலில் சாமி தரிசனம் செய்த தங்கர் பச்சான், வெளியில் வந்த போது அங்கு இருந்த கிளி ஜோசியரிடம் தனக்கு கிளி ஜோசியம் பார்க்கும்படி கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கிளி ஜோசியர் ஜோசியம் பார்த்த போது, அவருக்கு வந்த அட்டையில் அந்த கோயிலில் உள்ள அழகுமுத்து அய்யனார் சாமியே வந்ததால், உங்களுக்கு வெற்றி என அந்த கிளி ஜோசியர் கூறியதை தொடர்ந்து, தங்கர் பச்சான் உடன் வந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில், பச்சைக் கிளிகளை கூண்டில் அடைத்து வைப்பது சட்டப்படி குற்றம் என்பதால், வனத்துறையினர் இது குறித்து விசாரித்து வழக்கு பதிந்தனர்.

மேலும், கிளி ஜோசியம் பார்த்தவர்களை இரண்டு நாட்களாக அவர்கள் தேடி வந்த நிலையில், இன்று அழகுமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்வராஜ் மற்றும் சீனிவாசன் ஆகிய இரண்டு சகோதரர்கள் கிளி ஜோசியம் பார்ப்பதற்காக வந்துள்ளனர். கிளி உடன் வந்திருந்ததை அறிந்த வனத்துறையினர், அங்கு சென்று இருவரையும் பிடித்து வந்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கூண்டுகளில் இருந்த நான்கு கிளிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்களிடம் தற்போது வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கிளிகளும் பறக்க விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், கிளி ஜோசியம் பார்த்தவர்கள் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோசியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து, தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த விவகாரத்தில் ஜோசியர் செல்வராஜ் கைது செய்யப்பட்டதற்கும், கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூர் மாவட்டம் தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி சோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழ்நாடு அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது.

கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குநர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிசோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தங்கர் பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி சோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? சோதிடம் கூறியதற்காக கிளி சோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர் தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது.

பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில் நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் சோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார்.

அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான சோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார். அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி சோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த சோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: “ஜோசியம்.. கிளி ஜோசியம்” - தங்கர் பச்சானுக்கு கிளி என்ன சொன்னது? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.