ETV Bharat / state

''அதிமுக, திமுகவை ஓட ஓட விரட்டி விட்டு பாஜகவுக்கு ஓட்டு போடுங்க" - குமரி வாகன பேரணியில் அமித்ஷா ஆவேச பேச்சு! - Lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 5:28 PM IST

தக்கலையில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் அமித்ஷா பேச்சு
அதிமுக, திமுகவை ஓட ஓட விரட்டி விட்டு பாஜகவிற்கு வாக்களியுங்கள்

Amit Shah road show at Kanyakumari: திமுக சனாதன தர்மத்தையும், அயோத்தியில் ராமர்கோயில் கட்டியதையும் கேவலமாக பேசி கோடிக்கணக்கான மக்களின் மனதை காயப்படுத்தியுள்ளனர் என கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

கன்னியாகுமரி: தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகள் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டுள்ளனர், அதிமுக திமுகவை ஓட ஓட விரட்டி விட்டு பாஜகவிற்கு வாக்களிக்கும் படி கேட்டு கொள்கிறேன் என இன்று (ஏப்.13) கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலையில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

தமிழகத்தில் இரண்டு நாள் தேர்தல் பிரச்சார சுற்று பயணத்தை மேற்கொள்வதற்காக, நேற்று மதுரைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று (ஏப்.13) இரண்டாவது நாளாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்த அமித்ஷா, அங்கிருந்து சாலை மார்க்கமாக தக்கலை பகுதிக்கு வந்தடைந்தார். அவருக்கு பாஜக தொண்டர்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து தக்கலை பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்சியில் கலந்து கொண்ட அமித்ஷா, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில், “கன்னியாகுமரியில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன், நந்தினி ஆகியோருக்கு வாக்குகளை சேகரிக்க வந்த எனக்கு, மிகச்சிறந்த வரவேற்பை தந்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் நான் தமிழில் பேச முயற்சிப்பேன்: இந்த தேர்தல் தேசம் முழுவதும் நடக்கிறது, என்.டி.ஏ கூட்டணியினர் மோடிக்காக சிறப்பாக களப்பணியை செய்து கொண்டுள்ளனர். தமிழ் மொழி, தமிழ் பண்பாடு, தமிழகத்தின் மரியாதையை தேசம் முழுவதும் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொண்டு செல்ல பிரதமர் மோடி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

உங்களிடத்தில் தமிழில் பேச முடியவில்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது, மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் நான் தமிழில் பேச முயற்சிப்பேன். அதிமுக, திமுக கட்சிகள் தமிழகத்தில் ஊழல் செய்து, தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் இந்த தேர்தலில் உங்களிடம் கேட்டு கொள்வது ஒன்றுதான், அதிமுக, திமுகவை ஓட ஓட விரட்டிவிட்டு பாஜகவிற்கு வாக்களியுங்கள்”, என கேட்டுக் கொண்டார்.

திமுக அயோத்தியில் ராமர்கோயில் கட்டியதை கேவலமாக பேசுகின்றனர்: தொடர்ந்து பேசுகையில், “திமுக சனாதன தர்மத்தையும், அயோத்தியில் ராமர்கோயில் கட்டியதையும் கேவலமாக பேசி, கோடிக்கணக்கான மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளனர். நாம் அத்தனை பேரையும் நம்மோடு இணைத்து கொண்டு வளர்ச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். மோடி நம் நாட்டை பாதுகாப்பாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் எடுத்து சென்று கொண்டிருக்கிறார்.

நான் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறேன், 3 வது முறையாக மோடி பிரதமராக வரும் போது 3 வது முறையாக பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்து அனுப்பினால் தேசம் வளர்ச்சிபெறும். தமிழ்நாட்டில் நான் செல்லும் இடம் எல்லாம், பாஜக 400 தொகுதிகளில் வெல்லும் என்கிறார்கள், 400 சீட்டுகளை நாம் கடக்க வேண்டும் அது பொன்னாரையும் சேர்த்து தான் இருக்க வேண்டும். நீங்கள் பொன்னாருக்கு வாக்களிப்பீர்களா? தாமரை சின்னத்தில் பட்டனை அழுத்துவீர்களா? விளவங்கோடு இடைத்தேர்தலில் நந்தினிக்கு வாக்களித்து வெற்றிப்பெற செய்யுங்கள்”, என அவர் பேசினார்.

இவரது ரோடு ஷா நிகழ்விற்காக தக்கலை பழைய பேருந்து நிலையம் முன்பு தொடங்கி, மேட்டுக்கடை வரையிலான 1.1 கிலோ மீட்டர் தூர சாலையானது சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் முன்னாள் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, பாஜக மாவட்ட பெருளாலர் முத்துராமன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வாகன பேரணி நடைபெறும் சாலையில் உள்ள கட்டிடங்கள், வீடுகள், மொட்டை மாடிகள் போன்ற பகுதிகளில் போலீசார் நிறுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் நாகர்கோவில்-திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா ரோடு ஷோ.. குமரியில் பலத்த பாதுகாப்பு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.