ETV Bharat / state

"சதுரங்க வேட்டை படப் பாணியில் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தது திமுக" - இபிஎஸ் சாடல்! - EPS CRITICIZED DMK GOVT

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 1, 2024, 10:30 PM IST

Updated : Apr 1, 2024, 11:01 PM IST

Edappadi Palaniswami
Edappadi Palaniswami

Edappadi Palaniswami: கடந்த தேர்தலில் 520 பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக. பொய் சொல்ல நோபல் பரிசு தந்தால் அதை ஸ்டாலினுக்குத் தான் வழங்க வேண்டும் எனவும், தமிழ்நாடு உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சோளிங்கர் பாண்டிய நல்லூர் பகுதியில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கண்ட கனவு மாறிவிட்டது. அவர்கள் இருவரும் தோல்வி பயத்தால் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். என்ன சொல்வதென்று தெரியவில்லை. கடந்த தேர்தலில் 520 பொய்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக. பொய் சொல்ல நோபல் பரிசு தந்தால் அதை ஸ்டாலினுக்குத் தான் வழங்க வேண்டும்.

கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்களால் இனி மக்களை ஏமாற்ற முடியாது. தமிழ்நாடு உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா எனக் கேள்வி எழுப்பினார். வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.

விமர்சனங்களுக்கு அதிமுக தொண்டன் கூட அஞ்சமாட்டான். மிரட்டலால் எங்களை அடிபணிய வைக்க முடியாது அதிமுக மீது பொய் வழக்குப் போடுவது திமுகவிற்கு வாடிக்கையாகி விட்டது. கீழே உள்ள சக்கரம் மேலே வந்தால் உங்களுக்கும் அதே கதி தான். எங்கள் ஆட்சியில் திமுக மீது எந்த வழக்கும் போடவில்லை, நாங்கள் மக்களுக்காக பணியாற்றுவதை மட்டுமே சிந்தித்தோம்.

திமுக எந்த திட்டங்களையும் கொண்டுவரவில்லை, கொண்டு வந்தால் தானே நாங்கள் குறை கூற முடியும். தில், திராணி, தெம்பு இருந்தால் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கிய பணிகளுக்கு வெறும் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டி திறந்து வைக்கிறார்கள்.

விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. அரிசி, எண்ணெய், ஆகியவை விலை உயர்ந்து விட்டது. அதைப் பற்றி கவலை கொள்ளாத, மக்களைப் பற்றிச் சிந்திக்காதவர் தான் முதலமைச்சர் ஸ்டாலின். முதலமைச்சர் போட்டோ ஷுட் செய்வார் அல்லது பளுதூக்குவார் அல்லது சைக்கிள் ஓட்டுவார். இதற்காகவா மக்கள் உங்களைத் தேர்வு செய்தார்கள், கிடைக்கும் நேரத்தில் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, மக்களின் குறைகளைப் பெட்டியை வைத்து வாங்கி செல்லும் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் அதை நிறைவேற்றுவேன் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளார். ஆனால் தற்போது அந்த பெட்டி தொலைந்து விட்டதா அல்லது சாவி இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவர் ஆசையைத் தூண்ட வேண்டும் என்ற சதுரங்க வேட்டை பட வசனத்திற்கு ஏற்றார் போல பெட்டியை வைத்து மக்களின் குறைகளை மனுவாக வாங்கி அவர்கள் குறைகளைத் தீர்ப்பதாக ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்துள்ளார். நல்லது செய்ய திமுகவினர் விஞ்ஞான மூளையை ஒருபோதும் பயன்படுத்த மாட்டார்கள், ஆனால் மக்களை ஏமாற்ற மட்டுமே பயன்படுத்துகிறார்கள் எனக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சியாக இருந்து எப்படி மத்திய அரசை விமர்சிக்க முடியும், ஆட்சியிலிருந்தால் தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தினால் அதனைக் கண்டித்து நாங்கள் குரல் கொடுப்போம்.

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தத் தவறிய போது, 22 நாட்கள் நாடாளுமன்ற அவையில் குரல் கொடுத்து அவையை ஒத்திவைத்துத் தடுத்தது அதிமுக அரசு. நீட் தேர்வு விவகாரத்தில் நாடாளுமன்ற அவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் அதை வைத்து அரசியல் செய்வது திமுக.

எங்குப் பார்த்தாலும் போதைப்பொருள், தமிழகம் போதைப் பொருட்கள் விற்கும் மாநிலமாக மாறிவிட்டது. திமுக அயலக அணி அமைப்பாளர் ஜாபர்சாதிக், வெளிநாட்டிற்குப் போதைப் பொருள் கடத்திய போது பிடித்து சுமார் ரூ.2000 கோடி போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

அப்படியென்றால், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கஞ்சா பொருட்கள் விற்பனை நடைபெற்றுள்ளது என்றால் தமிழகம் கஞ்சா மாநிலமாகத் தானே உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்து விட்டது. கொலை, கொள்ளை, வழிப்பறி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

ஆன்லைன் ரம்மி நிறுவனம் உட்படப் பலரிடமிருந்து திமுகவிற்கு ரூ.656 கோடி தேர்தல் பத்திரம் கிடைத்துள்ளது. தேர்தல் பத்திரம் குறித்துப் பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது. விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படாத அரசு திமுக.

அதிமுக ஆட்சியில் இருமுறை விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. இதற்குக் காரணம் சூப்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் எனக் கூறி உரையை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: வக்ஃபு வாரிய தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; மனுதாரர் புதிய மனுவைத் தாக்கல் செய்ய மதுரைக் கிளை உத்தரவு! - Waqf Board Chairman Case

Last Updated :Apr 1, 2024, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.