ETV Bharat / state

ஈரோடு ஆணவக்கொலை முயற்சி; சிபிசிஐடிக்கு மாற்ற வழக்கறிஞர் ப.பா.மோகன் வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 10:51 PM IST

advocate-mohan-wants-case-of-15-year-old-girl-death-in-attempted-murder-to-be-transferred-to-cbcid
ஆணவக் கொலை முயற்சியில் 15 வயது சிறுமி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் - வழக்கறிஞர் ப.பா.மோகன்

Advocate Mohan: காதல் திருமணம் செய்த காரணத்தினால் தனது கணவனை ஆணவக்கொலை செய்ய முயற்சித்து, அதில் கணவனின் தங்கை உயிரிழந்த வழக்கில் கொலைக்குக் காரணமான தனது தாய், தந்தை உள்பட அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மகள் தெரிவித்துள்ளார்.

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் - மகேஸ்வரி தம்பதியினரின் மகன் சுபாஷ். சத்தியமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் - சித்ரா தம்பதியினரின் மகள் மஞ்சு ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்திற்கு மஞ்சுவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மார்ச் 6ஆம் தேதி, சுபாஷ் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது தங்கையை, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதற்காக ஸ்கூட்டரில் சென்றபோது, சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் நெசவாளர் காலனி என்ற இடத்தில் பிக்கப் வேனில் அதிவேகமாக வந்த மஞ்சுவின் தந்தை சந்திரன், சுபாஷ் மற்றும் அவரது தங்கை இருவரும் சென்ற ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதில், தங்கைக்கு பலத்த காயம் அடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பவானிசாகர் போலீசார், தனிப்படை அமைத்து மஞ்சுவின் பெற்றோர் சந்திரன், சித்ரா, அவர்களது உறவினர்கள் வடிவேல், கார்த்திக், கொலை செய்ததும் சந்திரன் மற்றும் சித்ரா இருவரையும் தப்பிக்க வைக்க உதவிய அம்மாசை குட்டி, ஜெகதீஷ் ஆகிய ஆறு பேரை கைது செய்து, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தற்போது, சுபாஷின் வீட்டிற்கு காவல்துறை சார்பில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரபல வழக்கறிஞர் ப.பா.மோகன், இன்று (மார்ச் 10) சுபாஷின் வீட்டிற்கு வந்து, இது சம்பந்தமாக சுபாஷின் பெற்றோர் ஜெயபிரகாஷ், மகேஸ்வரி, சுபாஷின் மனைவி மஞ்சு ஆகியோரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறுகையில், "இந்த வழக்கில் போலீசார் முதலில் விபத்து வழக்காக பதிவு செய்து, பின்னர் கொலை வழக்காக மாற்றி உள்ளனர். இது சாதாரண வழக்கு அல்ல. கோகுல்ராஜ், கவுசல்யா சங்கர் போன்ற ஆணவக்கொலை இங்கு நடைபெற்றுள்ளது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் திருமணம் செய்தபோது, சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இவர்களுக்கு போதிய பாதுகாப்பினை காவல்துறையினர் வழங்கவில்லை.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் இந்த வழக்கில் கூடுதலாக நானும் ஆஜராகி வாதாடுவேன்" என தெரிவித்தார்.

இதற்கிடையே சுபாஷின் மனைவி மஞ்சு அளித்த பேட்டியில், "எனது கணவரின் தங்கையை எனது பெற்றோர் கொலை செய்துள்ளனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்" என கூறினார். இறந்த பெண்ணின் தாய் மகேஸ்வரி அளித்த பேட்டியில், "எனது மகளுக்கு வந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.