சென்னை: சென்னை ஐஐடியில் இந்தியாவில் முதல் முறையாக மருத்துவ பரிசோதனை ஆய்வக கருவிகளை நேரடியாக மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு செய்ய நடமாடும் ஆய்வக வாகனத்தைத் துவக்கி வைத்துள்ளது. மேலும், இந்த வாகனத்தின் மூலம் 45க்கும் மேற்பட்ட மருத்துவ கருவிகளை ஆய்வு செய்து அதன் செயல் திறன் மற்றும் துல்லியத்தை உறுதிசெய்ய முடியும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் உபயோகப்படுத்தப்படும் இசிஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட 45 வகையான நோய்களைக் கண்டறிவதற்குரிய மருத்துவ கருவிகளின் தரம் மற்றும் அதன் செயல்படும் தன்மையினை உறுதி செய்ய நடமாடும் பரிசோதனை ஆய்வகத்தைச் சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது.
இந்த வாகனத்தைத் துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, அனைவருக்கும் ஐஐடி என்ற திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் உள்ள பரிசோதனை கருவிகளை நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்யும் முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ள இசிஜி, எக்கோ, பிபி சுகர் உள்ளிட்டவற்றைக் கண்டறியும் கருவிகளை எளிதில் பரிசோதனை செய்து அதன் செயல்பாட்டை உறுதி செய்ய முடியும்.
குறிப்பாக, கிராமப்புறங்களில் தரமான மருத்துவம் வழங்கத் தொழில்நுட்பம் முக்கிய பங்களிக்கிறது. பொதுவாக, மருத்துவ கருவிகள் மூலம் தான் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் நடைபெற்று வருகிறது. அப்படி, மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் கருவிகளில் ஏற்படும் பிரச்சனைகளால் 25 சதவீத சிகிச்சைகள் வெற்றியடையாமல் போகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கருவிகள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை செயல்பாடுகளை ஆய்வு செய்து செயல் திறனை உறுதி செய்ய வேண்டும். சில மருத்துவமனைகளில் ஒரு சில கருவிகள் மட்டுமே இருப்பதால் அதனைப் பரிசோதனை செய்வதற்காக வெளியில் எடுத்து வரும் பொழுது அங்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள்.
நாங்கள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்யும் பொழுது அனைவருக்கும் ஐஐடி என்பது போல் அனைவருக்கும் தரமான மருத்துவச் சிகிச்சையும் கிடைக்கும். முதலில் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ளோம். பிற மருத்துவமனைகள் தங்களின் கருவி ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டாலும் பரிசோதனை செய்து தருவோம். இதற்காக NABL (National Accreditation Board for Testing and Calibration Laboratories) சான்றிதழ் பெற உள்ளோம். அதனைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் உள்ள கருவிகளைப் பரிசோதனை செய்து அளிப்போம்” என தெரிவித்தார்.