ETV Bharat / state

தென் மாவட்ட நீர்நிலைகளைத் தேடி வரும் ஆர்க்டிக் துருவ பறவையினங்கள் - வியக்க வைக்கும் ஆய்வுகள் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 7:32 PM IST

Updated : Mar 21, 2024, 9:16 AM IST

வியக்க வைக்கும் ஆய்வு
வியக்க வைக்கும் ஆய்வு

Birds migration to Southern Districts: ஆர்க்டிக் துருவத்திலிருந்து வலசை வரும் பறவையினங்களுக்கு தென் மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் மிகப்பெரிய வாழ்வாதாரமாகத் திகழும் நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் ஏறக்குறைய 107 பறவையினங்கள், இந்த நீர் ஆதாரங்களை நம்பி வாழ்வது தெரிய வந்துள்ளது. இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

தென் மாவட்ட நீர்நிலைகளைத் தேடி வரும் ஆர்க்டிக் துருவ பறவையினங்கள்

மதுரை: தற்போதுள்ள தமிழக நிலப்பரப்பில் உள்ள வற்றாத ஜீவநதிகள் எனக்கூறப்படும் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட அனைத்து நதிகளும் வற்றிவிட்ட நிலையில், நமது முன்னோர்கள் கண்டறிந்த மிகச்சிறந்த நீரியல் நிர்வாக முறையின் வெளிப்பாடான ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்டவை, ஆர்டிக் துருவப் பகுதியிலிருந்து வரும் அழியும் நிலையில் உள்ள பறவைகளுக்கு வாழ்விடமாக மாறியுள்ளது.

பருவ காலத்தில் பொழியும் மழைநீரைச் சேமித்து, அதனை சரியான முறையில் பகிர்ந்தளித்து, மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்தவர்கள் பண்டைத் தமிழர்கள். இப்போதும்கூட அவர்கள் உருவாக்கி வைத்த நீர்நிலைகளைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் பல அழிக்கப்பட்டபோதும்கூட, எஞ்சியுள்ள நீர்நிலைகளே இன்றைக்கும் நம்மை வாழ வைத்து வருகிறது.

இந்நீர்நிலைகளைச் சார்ந்து வாழும் உயிரின வகைகளில், பறவைகளின் பங்களிப்பு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. புள்ளி அலகு வாத்து, கொண்டை வாத்து, விசில் வாத்து, தாழைக்கோழி, அல்லி மடையான் உள்ளிட்ட பல்வேறு வகையான உள்நாட்டுப் பறவைகளோடு, வயல் உள்ளான், பச்சைக்கால் உள்ளான், வாலாட்டி உள்ளான் (Sandpipers), கொசு உள்ளான் (Little stint) உள்ளிட்ட உள்ளான் வகை பறவையினத்தில் மட்டும் நான்கு வகைகள் இந்நீர்நிலைகளை நோக்கி வருகின்றன.

ஊசி வால் சிறகி (Northern pingai), தட்டை இறகு வாத்து (Northern shoveler), பனக்கொட்டைச் சிறகி (Blue winged teal & Green winged teal), சந்தனத்தலை வாத்து (Wigeon) சைனா, மங்கோலியாவிலிருந்து வரக்கூடிய வரித்தலை வாத்து (Bar headed goose) சுமார் 27 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கக்கூடியதாகும்.

இவை அனைத்தும் ஆகஸ்ட் மாதம், தென் மாவட்டக் கண்மாய்களுக்கு வருகை தந்து மார்ச் மாதம் திரும்பிச் சென்று விடுகின்றன. இவற்றில் சில இனப்பெருக்கத்திற்காகவும், சில உணவுக்காகவும் வருகை தருகின்றன. இதனால் அப்பகுதிகளில் உணவுச் சங்கிலியில் நல்ல மாற்றத்தை உணர முடிகிறது. இந்த நிலையில், பறவையியல் அறிஞர் டாக்டர் பாலச்சந்திரன் தலைமையில், பறவை ஆய்வாளர்கள் பால் ஆண்டனி, முருகேசன் உள்ளிட்ட குழுவினர், 107 பறவையினங்கள் பாரம்பரிய நீர் ஆதாரங்களான கண்மாய் ஏரி ஊரணிகளை சார்ந்து வாழ்வதை உறுதி செய்துள்ளனர்.

இது குறித்து பறவையியல் அறிஞரும், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் உதவி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவருமான டாக்டர் பாலச்சந்திரன் கூறுகையில், “பாரம்பரிய நீர்நிலைகளுக்கு வந்து செல்லும் பறவைகள், பல்லுயிர்ச் சூழலுக்கு பெரிதும் பங்களிக்கின்றன. பறவைகள் சரணாலயங்களில் காண முடியாதவற்றை, இது போன்ற நீர்நிலைகளில் நாம் காண முடிகிறது. இயற்கையாக உள்ள சதுப்புநிலப் பகுதிகளில் அமைந்துள்ள நீர்நிலைகளை நோக்கி ஆர்டிக் துருவப் பகுதியிலிருந்து பறவைகள் வருகை தருகின்றன.

இவற்றில் குறிப்பிட்ட சில பறவையினங்கள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றை மீட்பதற்கு கண்மாய்களும், அதனைச் சார்ந்துள்ள வயல்வெளிகளும் முக்கிய காரணியாக அமைகின்றன. நமது தானியங்களை உண்ணக்கூடிய ஆர்டிக் பகுதி வாத்துகளும், தற்போது அதிகமாக காணப்படுகின்றன. மிகக் குறுகிய காலம் நடைபெற்ற எங்களது ஆய்வில் கிட்டத்தட்ட 107 வகையான பறவையினங்களைக் கண்டறிந்துள்ளோம்.

நீர்நிலைகளில் மட்டுமன்றி, நீர்நிலைகளைச் சார்ந்து வாழக்கூடிய பறவையினங்களும் அதிகமாக உள்ளன. பறவைகள் அதிகமாக இருந்தால், அப்பகுதி நல்ல வாழ்விடம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். உணவுச் சங்கிலியில் பறவைகளின் பங்களிப்பு அதிகமானது. மூன்று வகையான வாத்து இனங்கள், தங்களது குஞ்சுகளை அழைத்துச் செல்வதை பல நீர்நிலைகளில் நாங்கள் கண்டுள்ளோம்.

இப்பறவைகள் தங்களது இனப்பெருக்கத்திற்கு முக்கிய ஆதாரமாக, இந்த நீர்நிலைகளையே நம்பியுள்ளன. அழிவை நோக்கிச் செல்லும் ஆர்டிக் பறவையினங்களைக் காக்க வேண்டியது நம் கடமை. அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது மிக மிக அவசியம்” என்றார்.

இது குறித்து பிரதான் நிறுவனத்தின் ஏரிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் தலைவர் முனைவர் சீனிவாசன் கூறுகையில், “விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ஏரிகள், கண்மாய்கள், கால்வாய்கள், ஊரணிகளைச் சீரமைத்துள்ளோம். 'உணவெனப்படுவது நிலத்தொடு நீரே' என புறநானூற்று பாடல் கூறுகிறது. இங்கு நிலமும், நீரும்தான் நமக்கு உணவாகிறது.

நிலமும், நீரும் எங்கு இணைகிறதோ, அங்குதான் உணவு மட்டுமன்றி பல்லுயிர் உற்பத்தியும் அதிகமாகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. இது மனிதர்கள் இயற்கைக்கு ஆற்றிய நன்றிக்கடன் ஆகும்.

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 4,100 ச.கி.மீட்டரில் ஏறக்குறைய ஆயிரம் கண்மாய்கள், 2,500 ஊரணிகள், 3 ஆயிரம் கி.மீ. நீள கால்வாய்கள் உள்ளன. இவற்றில் நிகழும் பல்லுயிர்ப் பெருக்கம் மிகவும் அதிகம். குறிப்பாக வடக்கு ஐரோப்பா, ஆர்டிக், அலாஸ்கா ஆகிய பகுதிகளிலிருந்து பலவிதமான பறவைகள் இங்கே வருகின்றன.

இவையனைத்தையும் இதுவரை மிகப்பெரிய நீர்நிலைகளில்தான் கண்டறிந்தனர். இந்நிலையில், தற்போது கிராமப்புறங்களில் உள்ள சிறிய நீர்நிலைகளுக்கும் இப்பறவையினங்கள் வருகை தருவது வியப்பிற்குரியது. அந்த வகையில், பறவையியல் அறிஞர் டாக்டர் பாலச்சந்திரன் தலைமையிலான குழுவினர், பிரதான்-இன்டஸ்இன்ட் மாவட்ட வளர்ச்சித் திட்டத்தின் கீழ், இந்தக் கணக்கெடுப்பை கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வில்தான் துருவப்பகுதி பறவைகள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. விவசாய உற்பத்தி முன்னேற்றம் தவிர, பல்லுயிர்ப் பெருக்கத்திற்காக இந்த ஏரிகளும், குளங்களும் என்ன செய்கின்றன என்பதை அறிவதற்கான பணியாகவும் இது அமைந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து கடலோர வலசைப் பறவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஆய்வாளர் ரோஸ் கூறுகையில், “உள்நாட்டு நீர்நிலைகளுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டு வலசைப் பறவைகள், பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அளிக்கின்ற பங்களிப்பு குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.

உள்ளூர் சார்ந்த விவசாயப் பணிகளுக்கு, இந்தப் பறவைகளின் வருகை பெருமளவிலான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் வாயிலாக உள்ளூர் மக்களும் பயனடைகின்றனர். நமது சூழலியல் அமைவில், இப்பறவைகளிள் வருகை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால், நீர்நிலைகளைப் பாதுகாப்பது என்பது பல்லுயிர்ச்சூழலைப் பாதுகாப்பதற்கு சமமானது” என்றார்.

இந்தப் பறவையினங்கள் தென் மாவட்டங்களின் பல்லுயிர்ச்சூழலுக்கு மட்டுமன்றி, மக்களின் வாழ்வாதாரத்திற்கான மூலங்களாகவும் அமைகின்றன. மார்ச் 22ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள உலக தண்ணீர் தினத்தில், இந்த ஆண்டு 'அமைதிக்காக தண்ணீரைப் பயன்படுத்துதல் (Leverageing Water for Peace)' என்பது முழக்கமாக்கப்பட்டுள்ள நிலையில், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் வாழ்வாதாரங்களான நீர்நிலைகளைக் காப்பது பல்லுயிர்ச்சூழலுக்கும், அமைதிக்கும் வழிவகுக்கும் என்பதுதான் உண்மை.

பறவையியல் அறிஞர் டாக்டர் பாலச்சந்திரன் தலைமையில் பறவை ஆய்வாளர்கள் பால் ஆண்டனி, முருகேசன் உள்ளிட்ட குழுவினர் 107 பறவையினங்கள் பாரம்பரிய நீர் ஆதாரங்களான கண்மாய் ஏரி ஊரணிகளை சார்ந்து வாழ்வதை உறுதி செய்துள்ளனர்..

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: ஆயுதக் கிடங்காக இருந்த திருப்புல்லாணி அரண்மனை பராமரிக்கப்படுமா? தமிழக அரசிற்கு தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Last Updated :Mar 21, 2024, 9:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.