ETV Bharat / state

கடற்கரை பூங்காவில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டித் தங்க செயினை பறித்த காவலர் கைது! - Policeman Snatched Gold Chain

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 5:45 PM IST

Policeman Snatched Gold Chain Was Arrested In Thoothukudi
Policeman Snatched Gold Chain Was Arrested In Thoothukudi

Policeman Snatched Gold Chain Was Arrested: தூத்துக்குடி கடற்கரை பூங்காவில் இருந்த காதல் ஜோடியை மிரட்டித் தங்க செயினை பறித்துவிட்டுத் தலைமறைவாக இருந்த திருநெல்வேலி ஆயுதப்படை காவலரை, தூத்துக்குடி போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர், சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி தனது காதலியுடன் முத்துநகர் கடற்கரை பூங்காவிற்கு வந்துள்ளார். அங்கு இளைப்பாறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள குடை போன்ற பகுதியில் பிற்பகலில் யாரும் இல்லாத நேரத்தில் அவர்கள் தனிமையில் இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்த காதல் ஜோடியைத் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதன் பின்னர் அந்த நபர், அந்த காதல் ஜோடியின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியதுடன். படத்தை வெளியிடாமல் இருக்க சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் காதலியிடம் இருந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார். இதனால் அந்த காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்தது.

இதனை அடுத்து சம்பவத்திற்கு மறுநாள், காதலியின் செயினை பறிகொடுத்த இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதே முத்துநகர் கடற்கரை பகுதிக்குச் சென்று தன்னிடம் செயினை பறித்த நபர் அங்கு இருக்கிறாரா? என தேடியுள்ளனர். அப்போது செயினை பறித்த அதே நபர் அங்கு நின்று கொண்டிருந்ததைப் பார்த்த அந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் செயினை பறிப்பில் ஈடுபட்ட அந்த நபரைப் பிடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது அந்த நபர் தனது இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பி ஓடி உள்ளார். இதனை அடுத்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த நபர் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு காதலியின் செயினை பறிகொடுத்த இளைஞர் வடபாகம் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்து புகார் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த நபரின் இருசக்கர வாகனத்தை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அந்த இருசக்கர வாகனம் நெல்லையில் காணாமல் போன இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது.

மேலும் தொடர்ச்சியாக நடத்திய விசாரணையில், அந்த இருசக்கர வாகனத்தை எடுத்து வந்தது தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த டென்னிஸ் ராஜ் என்பதும் மற்றும் டென்னிஸ் ராஜ், திருநெல்வேலி மணிமுத்தாறு ஆயுதப்படை காவலராக இருப்பதும், தற்போது விடுமுறைக்காகத் தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டுக்கு வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகத் தலைமறைவாக இருந்த டென்னிஸ் ராஜை வடபாகம் போலீசார் இன்று (மார்ச் 28) கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தூத்துக்குடியில் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த ஆயுதப்படை காவலர் இளம் காதல் ஜோடியை மிரட்டித் தங்க செயினை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரம்; தென்காசியைச் சேர்ந்த நபருக்கு முக்கிய பங்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.