ETV Bharat / state

மது அருந்தக்கூடாது என கூறியதால் ஆத்திரம்.. வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞர்கள் கைது! - Country Bomb Attack near Tambaram

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 6:14 PM IST

ADMK Ward Member House Country Bomb Attack
ADMK Ward Member House Country Bomb Attack

ADMK Ward Member House Country Bomb Attack: தாம்பரம் அருகே அதிமுக ஊராட்சி வார்டு உறுப்பினரின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி, நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத்தில் அதிமுக 12வது வார்டு உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். இவர் நெடுங்கன்றம் பகுதியில் வீட்டுடன் உணவகம் ஒன்றையும் நடத்திவரும் நிலையில், நேற்று முன்தினம் (ஏப்.28) தனது மனைவி மற்றும் மகனுடன் உணவுகளைத் தயார் செய்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அடுத்தடுத்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்படி அந்த நபர்கள் வீசிய குண்டுகள் இரும்பு கதவில் பட்டு தீப்பொறியுடன் பலத்த சத்தமாக வெடித்ததால் அலறிய முத்துப்பாண்டி குடும்பத்தினர், ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த தாம்பரம் துணை ஆணையாளர் பவன்குமார்ரெட்டி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (22) என்பவரை போலீசார் விரட்டிச் சென்று பிடிக்க முயன்ற போது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் மாவுகட்டு போட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கடந்த ஒரு வருட காலமாக முத்துப்பாண்டியின் மகன் அழகுபாண்டி கடையின் அருகில் தங்களை மது அருந்தக்கூடாது என கூறி, தன்னையும் தனது கூட்டாளிகளையும் தொல்லை கொடுத்து வந்ததால் அவரின் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்தார் அன்பழகன்.

இதனைத் தொடர்ந்து, அவரின் கூட்டாளியான ஜீவா (20) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அன்பழகன் வீட்டில் இருந்து 17 நாட்டு வெடிகள் மற்றும் ஒரு கையெறி குண்டு ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

மேலும், கூடுவாஞ்சேரி பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வரும் நபர்களிடம் இருந்து, வெடிகுண்டுகளை வாங்கி வந்து இது போன்ற பழிவாங்கும் நோக்கத்தில் சிலர் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகவே, தாம்பரம் ஆணையர் அமல்ராஜ் உடனடியாக இது குறித்துச் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சித்த மருத்துவர் குடும்பத்துடன் மோதல்.. சென்னை இரட்டைக்கொலை வழக்கில் வடமாநில இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.