ETV Bharat / state

வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பான வழக்கு; பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு உறுதி! - Vadalur Vallalar

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 10:59 PM IST

Vadalur Vallalar International Centre Case
Vadalur Vallalar International Centre Case

Vadalur Vallalar International Centre: வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்துவதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: வடலூர், வள்ளலார் சத்தியஞான சபை முன்பு அமைந்துள்ள பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள், கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று (ஏப்.30) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், "106 ஏக்கர் பெருவெளி நிலம் வள்ளலாருக்குச் சொந்தமானது. 150 ஆண்டு புராதன பகுதியான இங்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது. புராதன சின்ன ஆணையத்தின் ஒப்புதலை அரசு பெறவில்லை. அந்த பகுதியில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப் பக்தர்கள் விரும்பவில்லை. தற்போது அப்பகுதியை ஆய்வு செய்யும் மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் மீது நம்பிக்கையில்லை என்பதால், மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "வள்ளலார் சர்வதேச மையம், பிரதான கோயிலுக்கு அருகில் அமையவில்லை. 99.90 கோடி ரூபாய் அரசு செலவில், 500 பேர் அமரும் வகையிலான தியான மண்டபம், தர்மசாலை புதுப்பிப்பு, டிஜிட்டல் நூலகம், கழிவறை, சாலை வசதி, பக்தர்கள் தங்குமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த சொத்து கோயிலுக்குச் சொந்தமானதாகவே இருக்கும்" எனத் தெரிவித்தார்.

மேலும், பெருவெளி பகுதியான 71 ஏக்கரில் மூன்று ஏக்கர் பரப்பில் மட்டுமே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், தொல்லியல் துறை ஆய்வில் சில தொன்மையான படிமங்கள் கிடைத்ததால் அந்த பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் தொல்லியல் துறை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தொன்மையான கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அது பாதுகாக்கப்படும் என்றும் கூறினார்.

இதுமட்டும் அல்லாது, பெருவெளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகிறது. வழக்கு தொடர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்றார்.

இதன் தொடர்ச்சியாக, நிபுணர் குழு அறிக்கை அளிக்க மூன்று, நான்கு வாரங்கள் வரை ஆகலாம் என்பதால் கட்டுமானப் பணிகளை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது என நீதிபதிகள் அரசுத்தரப்பை கேட்ட போது, பணிகளை நிறுத்தி வைக்க அறிவுறுத்துவதாக தலைமை வழக்கறிஞர் உறுதி தெரிவித்தார். இதனை அடுத்து, வழக்கின் விசாரணையை மே 10ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு; நீலகிரி அதிமுக செயலாளருக்கு முன் ஜாமீன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.