கோவை: தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் இணைந்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு மே 23ஆம் தேதி தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 4 மாநிலங்களில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு மே 23ஆம் தேதி பிளாக் வாரியாகவும், மே 24ஆம் தேதி நேர்க் கோட்டுப்பாதை முறையிலும், மே 25ஆம் தேதி நீர்நிலை பகுதிகளில் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நேற்று நிறைவடைந்தது. தமிழகத்தில் கடந்த 2023-ல் நடைபெற்ற யானைகள் கணக்கெடுப்பின்படி, 2,961 யானைகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில், கோவை மாவட்டத்தில் 196 யானைகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இது குறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், 'கோவை வனக்கோட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகத்தில் 42 பிளாக்குகள் உள்ளன.
இதில் 84 வனத்துறை ஊழியர்கள், 40 மத்திய வன உயர் பயிற்சியகத்தின் பயிற்சி அலுவலர்கள், இயற்கை வன நிதியம் அமைப்பினர் (WWF) இணைந்து கணக்கெடுப்பு நடத்தினர். யானைகள் கணக்கெடுப்பு குறித்த தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு வாரத்தில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அனுப்பி வைப்போம்.
அங்கிருந்து புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு சென்னையில் உள்ள வனத்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் அதன் முடிவுகள் 10 நாட்களில் வெளிவரும். இந்த மூன்று நாட்களிலும் அதிகமான யானை தென்பட்டு உள்ளதால் யானைகளின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக' கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “படிப்பு முக்கியம்பா..” 2 ஆண்டுகளாக இருண்டு கிடந்த வீட்டிற்கு வெளிச்சம் கொடுத்த அரசுப் பள்ளி மாணவி! - Tiruvarur School Girl