ETV Bharat / state

தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கையிலிருந்து 19 மீனவர்கள் சென்னை வருகை! - TAMILNADU FISHERMAN released

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 9:15 PM IST

tamilnadu fisherman
tamilnadu fisherman

Tamil Nadu Fisherman: கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாக வெடித்து அதிர்வலையை ஏற்படுத்திவரும் நிலையில், இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு தற்போது விடுதலையாகியுள்ள 19 தமிழக மீனவர்கள் இலங்கையிலிருந்து சென்னை வந்தனர்.

சென்னை: தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள், கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி, இரண்டு விசைப்படகுகளில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நள்ளிரவில், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வந்து, தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் மடக்கிப் பிடித்தனர். அதோடு இவர்கள் எல்லை தாண்டி, இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்து உள்ளதாகக் கூறி, இரண்டு படகுகளையும், மீன்பிடி வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

அதன் பின்பு 19 மீனவர்களையும் இலங்கைக்குக் கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, இலங்கை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மீனவர்களின் குடும்பத்தினர் இலங்கை கடற்படையால், பிடித்துக் கொண்டு செல்லப்பட்ட மீனவர்களை,விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய மாநில அரசுகளுக்குக் கோரிக்கைகள் விடுத்தனர். இதை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், உடனடியாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவசர கடிதம் எழுதி, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், 19 தமிழக மீனவர்களையும், விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. அதோடு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம், விடுதலையான மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்தியத் தூதரக அதிகாரிகள், தமிழக மீனவர்களை தங்களுடைய பராமரிப்பில் வைத்துக் கொண்டு, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தினர். அதோடு 19 மீனவர்களையும் விமானம் மூலம், இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மீனவர்களுக்கு பாஸ்போர்ட்கள் இல்லாததால், அனைவருக்கும் தூதரக அதிகாரிகள் அவசரக்கால பயண சான்றிதழ்கள் வழங்கினர். அதோடு இந்தியத் தூதரகம் 19 மீனவர்களுக்கும், இலங்கையிலிருந்து சென்னை வருவதற்கான விமான டிக்கெட்கள் ஏற்பாடுகள் செய்தனர்.

இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 19 தமிழக மீனவர்களும், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில், மீனவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதோடு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த, வாகனங்களில், மீனவர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: சூடுபிடித்துள்ள தேர்தல் பிரச்சாரம்: விழுப்புரம் தொகுதியில் நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்கள்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.