ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு - குற்றம் சாட்டப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 5:18 PM IST

Sterlite Gun Fire Case

Sterlite Gun Fire Case: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல் துறையினர் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

ஆணையத்தின் புலன் விசாரணைப் பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கைத் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கில், அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சம்பவத்தின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த V.வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி-யாக இருந்த ஷைலேஷ் குமார் யாதவ், மாவட்ட எஸ்.பி-யாக இருந்த பி.மகேந்திரன், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட 21 பேருக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மனுதாரர் தரப்பில், மாவட்ட ஆட்சியர், 3 சிறப்பு தாசில்தார்கள், முக்கிய சாட்சியான சிபிஐ மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் மற்றும் 17 காவல்துறை அதிகாரிகளை இணைத்து இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், "சம்பவத்தின் போது பணியில் இருந்த பெரும்பாலான காவலர்கள் தற்போது ஓய்வு பெற்றதால் பதிலளிக்கவில்லை. ஓய்வுக்குப் பின் பதிலை எதிர்பார்ப்பது தேவையற்றது. மேலும், அருணா ஜெகதீசன் அறிக்கை இன்னும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவில்லை (2022-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது).

ஆறு மாதத்திற்குள் சட்டப்பேரவையில் சமர்ப்பித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார். இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசு சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பாதுகாக்க நினைக்கிறது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் காவலர்கள் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டின் போது என்ன நடந்தது? என்பதை இந்த நீதிமன்றம் தெரிந்து கொள்ள விரும்புகிறது. அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக முன்னர் ஆஜராகி இருந்தாலும், அரசு வழக்கறிஞராகத் தொடர்ந்து வாதம் செய்ய நீதிமன்றத்திற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

தொடர்ந்து வழக்கில் ஆஜராகலாம். அதனால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகளும், பிப்ரவரி 21ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ராகுல் காந்தியின் கார் கண்ணாடி மீது கல்வீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.