ETV Bharat / entertainment

இளையராஜா - வைரமுத்து பிரிவுக்கு காரணம் என்ன? - இருமகா கலைஞர்கள் பிரிந்த பின்னணி! - Vairamuthu Ilayaraja controversy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 10:06 AM IST

Vairamuthu Ilayaraja controversy
Vairamuthu Ilayaraja controversy

Vairamuthu Vs Ilayaraja controversy: இசை பெரிதா? மொழி பெரிதா? என தமிழ் திரைத்துறையின் இருபெரும் ஆளுமைகள் போட்டியிட்டு கொள்வது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவருக்கும் இடையே என்ன நடந்தது? எங்கே விரிசல் விடத் தொடங்கியது? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

Vairamuthu Ilayaraja controversy

சென்னை: தமிழ் சினிமாவில் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரும் மிகப் பெரிய ஆளுமைகள். இருவரும் இணைந்து கொடுத்த பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் இன்றளவும் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது. முதல்முறையாக பாரதிராஜாவை சந்தித்த வைரமுத்து தனது 'திருத்தி எழுதாத தீர்ப்புகள்' என்ற கவிதை புத்தகத்தை பாரதிராஜாவிடம் நீட்டிவிட்டு முடிந்தால் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்கிறார்.

கவிதைகளை படித்த பாரதிராஜா வியந்து போய் இளையராஜாவிடம் அறிமுகம் செய்கிறார். மெட்டுக்கு எழுதுவீர்களா என்று கேட்டதற்கு முயற்சி செய்கிறேன் என்கிறார் வைரமுத்து. இளையராஜா மெட்டமைக்க உருவானதுதான் நிழல்கள் படத்தில் 'இதுவொரு பொன்மாலை பொழுது' என்ற பாடல். அப்போதே வைரமுத்துவை கட்டியணைத்து பாராட்டினார் இளையராஜா.

அதன்பிறகு பல ஆண்டுகள் இந்த இணை இசை உலகில் கோலோச்சியது. பின்னர் மற்ற இசை அமைப்பாளர் இசையிலும் பாடல்கள் எழுதிவந்தார் வைரமுத்து. இதனால் இளையராஜாவின் ஒளிப்பதிவுக்கு தாமதமாக வரத் தொடங்கினார். அன்றிருந்துதான் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது என்கின்றனர். அதுமட்டுமின்றி சில பாடல் வரிகளில் இளையராஜா தலையிட விரிசல் மேலும் வலுப்பெற்றது.

வைரமுத்து எப்போதும் ஒரு படத்தில் முழு பாடல்களையும் அவரே எழுதும் பழக்கம் உடையவர். இந்த நிலையில் தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் ஒரு பாடலை வாலியை வைத்து எழுத வைக்கிறார் இளையராஜா. இது மீண்டும் இருவருக்குள்ளும் விரிசலை அதிகரித்தது. அதன்பிறகு பாலசந்தர் இயக்கிய 'புன்னகை மன்னன்' படத்தில் முழுவதுமாக பிரிந்தது இந்த இணை.

அதன்பிறகு வைரமுத்துவுக்கு சில ஆண்டுகள் பாடல் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இடையில் பல இசை அமைப்பாளர்களை இயக்குநர்களிடம் அறிமுகம் செய்துவைத்தார் அவர். அவர்களில் ஒருவர்தான் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் வருகைக்கு பிறகு வைரமுத்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார். இதனால் இளையராஜாவுக்கு படவாய்ப்புகள் குறைந்துவிட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இவர்கள் இருவரையும் இணைக்க அவ்வப்போது முயற்சிகள் நடந்தாலும் அது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் 'படிக்காத பக்கங்கள்' (Padikkatha Pakkangal) படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருவதாக அவர் பேசியிருந்தார். மேலும் இசையும் மொழியும் இணையும் போதுதான் கலை வெற்றிபெறுகிறது என்றார்.

வைரமுத்து பேச்சு: அவர் பேசியது, “ஒரு பாடலில், இசை பெரிதா? மொழி பெரிதா? என்பது ஒரு பெரிய சிக்கலாக பேசப்பட்டு வருகிறது. இதில், என்ன சந்தேகம் உங்களுக்கு, இசை எவ்வளவு பெரிதோ மொழி அவ்வளவு பெரிது, மொழி எவ்வளவு பெரிதோ இசை அவ்வளவு பெரிது. இரண்டும் கூடினால் தான் அது பாட்டு. ஆனால் சில நேரங்களில் மொழி உயர்ந்ததாகவும், சில நேரங்களில் மொழியை விட இசை உயர்ந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்கள் உண்டு. இதை புரிந்து கொள்பவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என்றார்.

இந்நிலையில், இதற்கு இயக்குநர், பாடலாசிரியர் கங்கை அமரன் வைரமுத்துவை வசைபாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது திரைத்துறையில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் வைரமுத்து எங்களால் மேலே வந்தவர். வந்த இடத்தை காலில் போட்டு மிதிக்கிறார். மனிதனுக்கு நன்றி வேண்டும் என்றெல்லாம் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

தமிழ் சினிமாவின் இருபெரும் முக்கிய கலைஞர்கள் இப்படி செய்வது நியாயமில்லை என்று திரைத்துறையினர் கிசுகிசுத்து வருகின்றனர். இருப்பினும், இனி இருவரும் இணைவதற்கு வாய்ப்பில்லை என்பதே வைரமுத்துவின் பேச்சும் உணர்த்துகிறது என்கின்றனர் நெட்டிஷன்கள்.

இதையும் படிங்க: "கங்கை அமரன் அரைவேக்காடு"..வைரமுத்துவுக்கு ஆதரவாக களமிறங்கிய வன்னியரசு! - Vanni Arasu

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.