ETV Bharat / entertainment

"கோயில்களுக்கு போக வேண்டாம்; சினிமாவுக்கு செல்லுங்கள்" - இயக்குநர் மிஷ்கின்! - THE PROOF MOVIE AUDIO LAUNCH

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 10:20 PM IST

Updated : Apr 30, 2024, 11:00 PM IST

Director Mysskin
Director Mysskin

Director Mysskin: நடன இயக்குநர் ராதிகா இயக்கத்தில் உருவாகி உள்ள தி ப்ரூஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சினிமா என்பது என்னைப் பொறுத்தவரைக் கடவுள் மாதிரி அதை நாம் வணங்குவோம் என இயக்குநர் மிஷ்கின் பேசினார்.

"கோயில்களுக்கு போக வேண்டாம்; சினிமாவுக்கு செல்லுங்கள்"

சென்னை: கோல்டன் ஸ்டுடியோ சார்பில், நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் 'தி ப்ரூஃப்' (THE PROOF). இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், யூகி சேது, பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உட்பட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது, "படத்தில் எல்லாமே மிக நன்றாக உள்ளது. ஒரு கிளாஸ் இயக்குநர் உருவாக்கியது போல மிக நன்றாக வந்துள்ளது. ராதிகா மிகவும் சிம்பிள், நல்ல திறமைசாலி. இப்ப சினிமா டிரெண்ட் மாறியிருக்கு. இயக்குநர்கள் நடிக்கிறார்கள், டான்ஸ் மாஸ்டர், நடிகர்கள் இயக்குகிறார்கள்.

ஆனால், எல்லோரையும் வரவேற்பது தான் சினிமா. மேக்கிங் ஸ்டைல் தெரியாமலே இப்போது படம் எடுக்கிறார்கள். அது சில நேரம் ஹிட் ஆவதால் அதைச் சரி என நான் சொல்ல முடியாது. எந்த இடத்தில் எந்த ஷாட் வைக்க வேணும் எங்கு இண்டர்வெல் விட வேண்டும் என்பதை உதவி இயக்குநர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது போதைப் பொருள் தான் டிரெண்ட். அதை வைத்து நாம் சம்பாதிக்கிறோம்.

பெரிய ஹிரோக்கள் இப்போது கதையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. காம்பினேசன் சரியாக அமைந்தால் போதும் என நினைக்கிறார்கள். நடிகர் சிவாஜி காலத்தில் இப்படியா இருந்தது? எல்லா புராணங்களையும் அவர் வழியில் தான் பார்த்திருக்கிறோம். அது தான் டிரெண்ட்.

ராதிகா உன்னை எல்லாரும் குழப்புவார்கள். அதைப் பற்றி நினைக்காதீர்கள். இன்றைய காலத்திற்குத் தேவையான கதையை எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். ருத்விக் மிகக் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் இருக்கிறார். அவரை நான் ஹீரோவாக்க நினைத்தேன். அதற்குள் ஹீரோவாகி விட்டார். வாழ்த்துக்கள். தன்ஷிகா நடிப்பு பிரமாதமாக உள்ளது.

நல்ல ஆக்சன், கிளாமர் என எல்லாம் அவருக்குச் சிறப்பாக வருகிறது. ராதிகா மிகவும் திறமையாகப் படத்தை மேக்கிங் செய்துள்ளார். தயாரிப்பாளர் கோமதிக்கு வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், தம்பி தீபக் பெரிய இசையமைப்பாளராக வருவதற்கு வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் அப்பா என் படங்களுக்கு வயலின் வாசித்துள்ளார். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்". என்று பேசினார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது, "இத்திரைப்படத்தில் என் மகளுக்கு நல்ல வாய்ப்பு வழங்கிய, ராதிகா மாஸ்டருக்கு நன்றி. ராதிகா மாஸ்டரின் திறமைக்கு இனி ஃபுரூஃபாக இந்தப்படம் இருக்கும் வாழ்த்துக்கள். பெண்களை ஆண்கள் தடுக்கிறார்கள் எனச் சொன்னார்கள், பெண்களுக்கு வாய்ப்பு தந்து அழகு பார்ப்பது ஆண்கள் தான் என்பதை இங்குச் சொல்லிக்கொள்கிறேன். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி" என்று பேசினார்.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, "ராதிகாவை நான் வாடி போடி என்று தான் கூப்பிடுவேன். அவள் எனக்கு அந்தளவு நெருங்கிய தோழி. நானும், அவளும் சினிமாவில் அசிஸ்டெண்டாக இருந்த காலத்திலிருந்து தெரியும். நான் படம் பண்ண ஆரம்பித்த போது, அவளைத் தான் முதலில் கூப்பிட்டேன். ஆனால், வர மாட்டேன் என்றாள், முதல் மூணு படத்திற்கும் கூப்பிட்டேன் வரவில்லை. ஆனால், அவளே ஒரு நாள் கூப்பிட்டு நான் ரெடி சார் எனச் சொன்னாள்.

அவளுக்கு நம்பிக்கை வந்த பிறகு என்னிடம் வந்து மாஸ்டராக பணியாற்றினாள். சினிமாவில் பல காலம் ஒரு சிலர் மட்டுமே நண்பர்களாக இருப்பார்கள். நான் 300 பேருக்கு மேல் அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆனால், என் பிறந்த நாளுக்கு முதல் ஆளாக ராதிகா தான் போன் செய்வாள்.

அத்தனை சிறந்த நட்பு, அவள் படமெடுத்திருக்கிறேன் என்று சொன்ன போது நம்பவில்லை, படத்தில் ஜெயிச்சிட்டியா என கேட்கும்போது, முயற்சித்து கொண்டிருப்பேன் என வசனம் வருகிறது. அது தான் முக்கியம் முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும். அது தான் சினிமா. அதே மாதிரி நீயும் சினிமாவில் இரு.

நான் சினிமா பற்றி கருத்துச் சொல்ல மாட்டேன். படமெடுத்து விட்டாய் இனி பத்திரிக்கையாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். ராதிகா 30 மார்க் எடுத்திருந்தால் 50 மார்க் கொடுங்கள் அதை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

தீபக் இசையமைப்பாளர் சின்ன பையன், பாடல் சூப்பர் என்று சொல்ல மாட்டேன் நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள். சாய் தன்ஷிகா மிகச்சிறந்த நடிகை அவரை என் படத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். வருங்காலத்தில் அவருக்காகக் கதை எழுதுவேன். அண்ணாந்துப் பார்க்கக்கூடிய விஷயம் கடவுளுக்கு அப்புறம் சினிமா மட்டும் தான்.

ஒரு குடும்பம் மாதத்திற்கு ஒருமுறை தியேட்டருக்குப் போய் சினிமாவை பார்க்கவில்லை என்றால் அது குடும்பமே இல்லை என நான் சொல்வேன். கோயில்களுக்கு எல்லாம் போக வேண்டாம். படத்துக்குச் செல்லுங்கள் என்று பேசினார்.

இயக்குநர் ராதிகா பேசியதாவது, "என்னை இன்று வரை தோழியாக மதித்து, எனக்கு வாய்ப்பளித்த மிஷ்கின்க்கு என் நன்றிகள். நான் இங்கு நிற்கக் காரணம் அவர் தான். எனக்கே என் திறமையைச் சுட்டிக்காட்டியவர் அவர் தான். அவருக்கு நன்றி.

ராஜன் அப்பா என் அப்பாவின் தோழர் இன்று வரை என்னை மகளாகத்தான் பார்த்துக் கொள்கிறார். இப்படத்திற்காக என்னுடன் துணை நின்ற ஜேசன் மற்றும் எடிட்டர் கமலக்கண்ணனுக்கு நன்றிகள். என் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

சாய் தன்ஷிகா ஆக்டிங் பத்தி எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்தப்படத்தில் அவர் மனசாட்சிக்கு எவ்வளவு பயப்படுகிறார். அடுத்தவருக்காக எத்தனை இறங்கி வருவார் எனப் பார்த்தேன். மிகச்சிறந்த மனித நேயம் கொண்டவர்.

படத்தில் அடிபட்டு ரத்தம் வந்த போது கூட பதறாமல் இருந்தார். நாங்கள் தான் பதறினோம். அவரை வைத்து இன்னும் 100 படம் என்றாலும் பண்ணுவேன். என் மகன் இசையமைப்பாளர் அவன் பிள்ளையாகக் கிடைத்தது எனக்குத் தான் பெருமை. எங்களை வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.

இதையும் படிங்க: செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.. தென்மத்திய ரயில்வே அறிவிப்பு! - Secunderabad Ramnad Special Trains

Last Updated :Apr 30, 2024, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.