ஈரோடு: தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்ந்தவராகத் திகழ்ந்து வருகிறார்.
தற்போது நடிகை த்ரிஷா, இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ்கான் ஆகிய இருவரும் இணைந்து இயக்கும்
மலையாளத்தில் தயாராகி வரும் ‘ஐடென்டிட்டி’ என்ற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் டோமினோ தாமஸ் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அடுத்த சிங்கம் பேட்டையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த மில்லில் பல கோடி மதிப்பில் செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) நடிகை த்ரிஷா பங்கேற்ற காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. அவர் வந்திருப்பதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், படப்பிடிப்புத் தளத்தில் குவிந்துள்ளனர். முதலில் அவரைக் காண்பதற்கு படப்பிடிப்பு குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், த்ரிஷாவைப் பார்க்காமல் இங்கிருந்துச் செல்ல மாட்டோம் என்று கூறி, அவரது கேரவனை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். இதனால், அங்கு சற்று பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து, இது குறித்த தகவலை நடிகை த்ரிஷாவிடம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக, த்ரிஷா தனது கேரவனிலிருந்து வெளியே வந்து ரசிகர்களைப் பார்த்து கையசைத்து நன்றி தெரிவித்தார். த்ரிஷாவைப் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் “த்ரிஷா..த்ரிஷா” என கோஷம் எழுப்பினர். பலர் தங்கள் செல்போனில் த்ரிஷாவை படம் பிடித்தனர்.
சிறிது நேரம் ரசிகர்களைப் பார்த்து கையசைத்த த்ரிஷா, மீண்டும் கேரவனுக்குள் சென்றார். இதனையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். தற்போது இது குறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: உயர் பதவியில் இருந்துகொண்டு இவ்வாறு பேசலாமா? - பிரதமர் மோடிக்கு ஈபிஎஸ் கண்டனம்! - Edappadi Palanisamy