ETV Bharat / education-and-career

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு; 2,582 பணியிடங்களுக்கு 41,485 பேருக்கு தேர்வெழுத அனுமதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 12:08 PM IST

Updated : Feb 4, 2024, 2:27 PM IST

Etv Bharat
Etv Bharat

TRB Exam: தமிழ்நாட்டில் முதல்முறையாக பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெறுகிறது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பணியில் உள்ள 2,582 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 41 ஆயிரத்து 485 தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 130 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மையத்திற்குள் காலை 8.30 மணி முதல் முழுவதும் சோதனை செய்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், அவர்கள் காலை 9.30க்கு மேல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தமிழ் மொழித் திறன் அறிவதற்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடமான தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் இருந்து ஒரு பாடத்தில் 150 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு இடம் பெறும். தேர்வுகள் காலை 10.30 மணிக்கு துவங்கிய நிலையில், 1.30 மணிக்கு முடிவடையும்.

தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள்: ஹால் டிக்கெட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கருப்பு நிற பேனா ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்பட்டன. தேர்வு அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டனர். அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் தேர்வினைக் கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறையின் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணித்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தேர்வினைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு மையத்தில் அரசுத் தேர்வு நடைபெறுவதால், அனுமதியின்றி யாரும் நுழையக்கூடாது என்ற எச்சரிக்கை வாசகம் வைக்கப்பட்டது. அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்குள் வைத்திருக்க அனுமதியில்லை. தேர்வறைக்குள் அறைக் கண்காணிப்பாளர் அல்லது பிற தேர்வர்களிடம் முறை தவறி நடந்தால், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் போன்றவை குறித்தும் தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர்கள், தேர்வர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றாமல் குற்றவியல் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள், தேர்வினைத் தொடர்ந்து எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் மூன்றாண்டுகளுக்கு எழுதத் தேர்வுகளைத் தொடர்ந்து எழுத தடை விதிக்கப்படுவதுடன், காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தினர்.

இதன்படி, சென்னை மாவட்டத்தில் 8 மையங்களில் 2,192 பேர் எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு வந்த பட்டதாரி ஆசிரியர்களை, காவல் துறையின் மூலம் சோதனை செய்த பின்னர் தேர்வறைக்குள் அனுமதித்தனர். தேர்வர்கள் கையில் செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச், கால்குலேட்டர் , வாட்டர் பாட்டில் போன்ற எந்தப் பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மேலும், இது குறித்து தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரும், நந்தனம் மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான அஞ்சுகம் கூறும்போது, “இந்த மையத்தில் 280 தேர்வர்கள் கணக்கு பாடத்திற்கான தேர்வினை எழுத உள்ளனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் கூறிய அறிவுரைகளை தேர்வர்களுக்கும் கூறியுள்ளோம். தேர்வு மையத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களின் விடைத்தாளில் விடைகளை குறியீடு செய்யும் பக்கத்தில் உள்ள வட்டத்தில் படாத வகையில் செய்ய வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி உள்ளோம்” என தெரிவித்தார். மேலும், அரசாணை 149-இன் படி முதல் முறையாக பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு போட்டி எழுத்துத் தேர்வு நடத்தப்படுவதுடன், தமிழ் மொழித்தேர்வில் கட்டாயம் தகுதி பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆய்வகப் பணியாளர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை

Last Updated :Feb 4, 2024, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.