ETV Bharat / education-and-career

தமிழகம், புதுச்சேரியில் தொடங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு.. மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படக்கூடாது என அமைச்சர் அறிவுரை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 11:32 AM IST

Updated : Mar 1, 2024, 12:31 PM IST

Plus 2 Public Exam
துவங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு

Plus 2 Public Exam: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு துவங்கிய நிலையில், 7,72,200 மாணவர்கள் தேர்வு எழுதுவதாகவும், அதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் தொடங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு

சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கிய நிலையில், தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, சுமார் 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுவதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வு கூறிய வினாத்தாள்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் பள்ளிகளில் 12ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் தவித்து, பிற வகுப்பு மாணவர்களுக்குக் காலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் மட்டும் 591 பள்ளிகளில் படிக்கும், 62 ஆயிரத்து 124 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வினை எழுதுகின்றனர். இத்தேர்வை கண்காணிக்கும் பணியில் முதன்மை கண்காணிப்பாளராக 265 பேரும், துறை அலுவலர்கள் 275 பேரும் வரை கண்காணிப்பாளர்களாக 3,200 பேரும் 620 பறக்கும் படை உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு எழுதும் மாணவர்களின் சந்தேகங்களைப் போக்கும் வகையில் அரசு தேர்வுத் துறை மூலம் தேர்வு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் 9498383076, 9498383075 என்ற எண்களில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் முதன்மைத் தேர்வு கண்காணிப்பாளர் அறையில் உள்ள ஆசிரியர்களிடம் தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதையடுத்து, ஆசிரியர்களிடம் பொது தேர்வு எழுதும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படக்கூடாது எனவும், ஏற்கனவே நீங்கள் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளீர்கள் எனவும் தெரிவித்த அமைச்சர், மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீரைக் குடித்து சோதனை செய்தார்.

இத்தேர்வில் மாணவர்களுக்குக் காலை 9.50 மணிக்கு வருகைப் பதிவேடு உறுதி செய்யப்பட்டு, கேள்வித்தாள் அடங்கிய பண்டல் மீது 2 மாணவர்களின் கையெழுத்தை ஆசிரியர் பெற்ற பின்னர், மாணவர்களுக்குக் கேள்வித்தாள் வழங்கப்பட்டு, பின்னர் 10.10 மணியளவில் மாணவர்களிடம் விடைத்தாள்கள் வழங்கப்பட்டு, காலை 10.15 மணி முதல் மதியம் 1:15 மணி வரை தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் மொழித்தாள் பாடத்தேர்வினை மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் எழுதி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை: தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாய்களுடன் அதிரடி சோதனை!

Last Updated :Mar 1, 2024, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.