டெல்லி : நதிகள் இணைப்பு, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மத்திய அரசு தங்களது பிரச்சினைகளை காது கொடுத்து கேட்காத பட்சத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக மக்களவை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தமிழக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்த்தாழ 200 தமிழக விவசாயிகள் மத்திய அரசின் மீதான தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பெண்கள் அங்கிருந்த மரங்களில் ஏறி தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பத்திரமாக மீட்டனர். விவசாய வருவாயை மூன்று மடங்காக உயர்த்துவதாக உறுதி அளித்த மத்திய அரசு அதை இதுவரை செய்யவில்ல என்றும், பயிர்களின் விலை உயரவில்லை என்றும் விவசாயிகள் கூறினர்.
பயிர்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை, விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம், தனிநபர் காப்பீடு மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், தாங்கள் மத்திய அரசுக்கோ, பிரதமருக்கோ எதிரானவர்கள் அல்ல என்றும் எந்த அரசியல் கட்சியின் தொடர்பு இல்லாதவர்கள் என்றும் மத்திய அரசின் உதவி கோரியே போராடி வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், தங்களது கோரிக்கைகள் குறித்து அரசு செவி சாய்க்காவிட்டால் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், ஜந்தர் மந்தரில் தங்களுக்கு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் நீதிமன்ற தங்களுக்கு அனுமதி வழங்கியதாகவும் விவசாயிகள் கூறினர்.
இதையும் படிங்க : "காங்கிரசின் நோக்கம் கொள்ளை - அது வாழும் போதும்.. வாழ்க்கைக்கு பின்னரும்"- பரம்பரை வரி விவகாரத்தில் பிரதமர் மோடி சாடல்! - Lok Sabha Election 2024