ETV Bharat / bharat

Budget 2024: மூலதன செலவீனங்களுக்கான நிதி அதிகரிப்பு - வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் - நிர்மலா சீதாராமன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 1:01 PM IST

Updated : Feb 1, 2024, 4:08 PM IST

Nrmala Sitaraman
Nrmala Sitaraman

நாட்டின் மூலதன செலவீனங்களுக்கு 11 புள்ளி 11 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

டெல்லி : நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் உரையுடன் நேற்று (ஜன. 31) தொடங்கியது. தொடர்ந்து 2024 - 25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார். விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

நடப்பாண்டில் மூலதன செலவீனங்களுக்காக நிதியை 11 புள்ளி 1 சதவீதம் உயர்த்தி 11 புள்ளி 11 லட்சம் கோடி ரூபாயாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் மூலம் நீண்ட கால அரசின் சொத்துகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரில் மூலதன செலவீனங்களுக்கான தொகை 33 சதவீதம் மத்திய அரசு உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதி ஆண்டின் முழு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலதன செலவீனங்களுக்கான தொகையை 33 சதவீதம் உயர்த்தி 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார். மூலதன செலவீனங்களுக்கான தொகையை உயர்த்தியதன் மூலம் மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி திறன் அதிகரிப்பு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், தனியார் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட திட்டங்களை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் இந்திய பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் அபரிவதமான வளர்ச்சி மற்றும் பல்வேறு துறைகளில் மக்கள் சார்ந்த சீர்திருத்தங்களை கண்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற போது மத்திய அரசு பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும், அதில் இருந்து மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்து மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

இரண்டாம் முறையாக மத்திய அரசு பொறுப்பேற்ற போது கரோனா பெருந்தொற்றால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் சீரிய நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கான சீர்திருத்தங்கள் மூலம் நாட்டை மீட்டு மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் 2047 ஆம் ஆண்டு விக்‌ஷித் பாரத் திட்டத்தை எதிர்நோக்கி மத்திய அரசு சென்று கொண்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன்மூலம் தொடர்ந்து அதிக முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல் பெண் நிதி அமைச்சர் என்ற சிறப்பை நிர்மலா சீதாராமன் பெற்றார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு பின் ஆட்சி அமைக்கும் அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இதையும் படிங்க : "அற்புதமான பணிகளால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம்" - நிர்மலா சீதாராமன்!

Last Updated :Feb 1, 2024, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.