ETV Bharat / bharat

"லஞ்சம் உரிமை அல்ல" - எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 4, 2024, 3:46 PM IST

Updated : Mar 4, 2024, 5:09 PM IST

Etv Bharat
Etv Bharat

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் கேள்வி கேட்க மற்றும் வாக்களிக்க எம்.பி, எம்.எல்.ஏக்கள் லஞ்சம் பெற்றால் சிறப்புரிமைகளை பயன்படுத்தி தப்பிக்க முடியாது எனவும் நிச்சயம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு அளித்துள்ளது.

டெல்லி: கடந்த 1988ஆம் ஆண்டு பிரதமராக இருந்த பி.வி நரசிம்மராவ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில், கூட்டணியில் இருந்து கொண்டே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்கள் மாற்று கட்சிக்கு வாக்களித்தனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், எந்த ஒரு சம்பவம் தொடர்பாகவும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கேள்வி எழுப்ப முடியாது என தீர்ப்பு வந்தது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த போது, 3 நீதிபதிகள் லஞ்சம் பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அரசியலமைப்புச் சட்டம் 105 (2) மற்றும் 194 (2) ஆகிய இரண்டின் கீழ் விலக்கு உள்ளதாக தீர்ப்பளித்தனர்.

இந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க, எம்.பிக்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர் சீதா சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அரசியலமைப்பு சட்டத்தின் ஊழல் தடுப்புச் பிரிவில் வழக்குப் பதிவு செய்வதில் இருந்து சீதா சோரன் விலக்கு கோரினார்.

இந்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இதன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ், பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா, சஞ்சய்குமார், மனோஜ் மிஸ்ரா ஆகிய 7 பேர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வெளியிட்டது.

அந்த தீர்ப்பில், மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அவைகளில் கேள்வி கேட்பதற்கும், தீர்மானங்கள் மற்றும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கும் சக உறுப்பினர்கள் அல்லது கட்சிகளிடமிருந்து லஞ்சம் பெற்றால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்களிப்பதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் லஞ்சம் பெறுவது என்பது நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட செயல் என்றும் அதற்காக ஊழல் தடுப்புச் சட்டத்தில் இருந்து விலக்கு கோர முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு லஞ்சம் பெறும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய விலக்கு அளிக்கப்படும் அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகள் அளித்த தீர்ப்பு முரணானது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் லஞ்சம் பெற்றால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்த 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்பது லஞ்சம் பெறுவதற்காக அல்ல என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : சன்ரைசஸ் ஐதராபாத் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்! எய்டன் மார்க்ராம் நீக்கம்! பின்னணி என்ன?

Last Updated :Mar 4, 2024, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.