ETV Bharat / bharat

குடியரசு துணைத் தலைவர் நிகழ்ச்சியில் அனுமதி மறுப்பு.. புதுவை பல்கலையில் செய்தியாளர்கள் வெளிநடப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 10:30 AM IST

Puducherry University
புதுச்சேரி பல்கலைக்கழகம்

Puducherry University: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வருகை புரிந்த நிகழ்ச்சிக்கு செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்தும், அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சிக்கு அழைத்தும் அனுமதிக்காததால் செய்தியாளர்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் "வளர்ந்த பாரதம் - 2047" என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

அதற்காக மாலை லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் தனது மனைவியுடன் வந்த குடியரசு துணை தலைவருக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு வந்த குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த நிலையில், குடியரசு துணை தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள், போட்டோகிராஃபர்கள், வீடியோ கிராஃபர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலும் அரங்கத்திற்குள் அனுமதியில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்த சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து செய்தியாளர்கள் உயர்மட்டம் வரை பேசியும் உள்ளே அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சற்று நேரத்திலேயே செய்தியாளர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரே கட்டத்தில் 10 செய்தியாளர்களை மட்டும் அனுமதிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை ஏற்காமல் ஒட்டுமொத்த செய்தியாளர்களும் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியேறினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ப்தியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் "வளர்ந்த பாரதம் - 2047" என்ற தலைப்பில் மாணவர்களுடன்
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்துரையாடி, பின்னர் இரவு கடற்கரை சாலையில் உள்ள நீதிதுறை விருந்தினர் விடுதியில் தங்கினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை சாலை மார்கமாக புதுச்சேரி விமான நிலையம் சென்று ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் கோயிலுக்கு சென்று வழிபடுகிறார்.

இதையும் படிங்க: பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்பு! 9வது முறை முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.