ETV Bharat / bharat

புதுச்சேரி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.22) தாக்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 8:28 PM IST

Etv Bharat
Etv Bharat

Puducherry Budget 2024-25: புதுச்சேரி சட்டசபையில் இன்று (பிப்.22) இடைக்கால பட்ஜெட்டை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் 2024-25ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காகப் புதுச்சேரி சட்டசபை இன்று (பிப்.22) காலை 9.50 மணிக்குக் கூடியது. சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபையைத் தொடங்கி வைத்தார். முதலில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் அமைச்சர் ப.கண்ணன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா, பங்காரு அடிகளார், பாத்திமா பீவி ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 4,634 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 5 மாத அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நடப்பாண்டில் அரசின் கூடுதல் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல், பொதுத்துறை நிறுவனங்களின் ஏடுகள் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன. தொடர்ந்து காலை 10.55 மணிக்கு அலுவல்களை முடித்து சபை நடவடிக்கை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

மேலும், சட்ட முன்வரைவுகள் எடுத்துக் கொள்ளப்பட்ட போது காங் - திமுக உறுப்பினர்கள், நாடாளுமன்றத் தேர்தல் இருந்தாலும் பல மாநிலங்களில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் புதுச்சேரி அரசு இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்துள்ளது எனக் கூறி ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

இன்று ஒரு நாள் மட்டுமே சட்டசபை கூட்டம் நடைபெற்றது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும். விதிகளின்படி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சட்டமன்றம் கூடியது. அன்று ஒரு நாள் மட்டுமே சட்டமன்றம் நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதினால் மார்ச் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் முடிவு செய்ய முடியாது என்பதால் அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக திருபுவனை சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளனுக்கு கார் வழங்காததைக் கண்டித்து அவர் இரு சக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு வந்தார். தனக்கு வழங்கப்பட்ட பழைய கார் பழுதடைந்து விட்டதால் புதிய கார் கேட்டுக் கொடுக்கவில்லை என முதலமைச்சர் மீது குற்றம்சாட்டினார்.

புதுச்சேரியில் உள்ள 32 சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கார் வழங்கப்பட்ட நிலையில், தனக்குப் புதிய கார் வழங்காததைக் கண்டித்து அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்ததாக அவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தை அனுமதிக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் அவை துவங்குவதற்கு முன் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பட்டு அங்கவஸ்திரத்தை அணிவித்து கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து முகமது ஷமி விலகல்? - என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.