ETV Bharat / bharat

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க தடை - கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 4:13 PM IST

Updated : Mar 6, 2024, 11:52 AM IST

Karnataka High Court
Karnataka High Court

Jayalalitha: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகள் உடைமைளை தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.

பெங்களூரு: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த சோதனையில் தங்கம் மற்றும் வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள், விலையுயர்ந்த செருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதற்கிடையே 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார்.

அதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட வேண்டுமெனவும், அதன் மூலம் வரும் பணத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரி ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதேநேரம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட உடைமைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க தமிழக உள்துறை அமைச்சகத்தில் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி மற்றும் ஐஜி அந்தஸ்தில் உள்ள காவலர் ஆகியோர் அடங்கிய குழு பெங்களூரு வருமாறும், மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தனது அத்தையின் நகை உள்ளிட்ட ஆபரணங்களை தன்னிடம் ஓப்படைக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கு நீதிபதி பி.எம் நவாஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்ததாகவும், மேலும் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் ஜெ.தீபா மறைந்த ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதால், அவரது தங்க ஆபரணங்கள் அனைத்தையும் ஜெ.தீபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என வழக்கறிஞர் வாதிட்டார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட உடைமைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை விதித்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அடுத்தகட்ட விசாரணையை மே 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க : சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம்! முழு இந்திய எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்கும் முய்சு! மத்திய அரசின் நடவடிக்கை என்ன?

Last Updated :Mar 6, 2024, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.