ETV Bharat / bharat

பஞ்சாப் கிஷான் போராட்டம்: போராட்டக் களத்தில் உயிரிழந்த விவசாயி! சக விவசாயிகள் மரியாதை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 7:02 PM IST

Punjab farmer dies of heart attack
மாரடைப்பால் உயிரிழந்த விவசாயி சியான் சிங்

Punjab farmer dies of heart attack: பஞ்சாபில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் சியான் சிங் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்: குறைந்தபட்ச ஆதார விலை, எம்.எஸ்.சாமிநாதன் ஆணையம் முடிவுகள் நடைமுறைப்படுத்துவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி நோக்கி பேரணியாக திரண்டு சென்ற ஏராளாமான விவசாயிகளை போலீசார் தடுத்து வருகின்றனர்.

கான்கிரீட் தடுப்புகள், கண்ணீர் புகைக்குண்டு, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை டெல்லிக்குள் நுழையவிடாமல் போலீசார் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் முதல் நாளில் இருந்து பஞ்சாப் எல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார எல்லைப் பகுதிகளில் பல்வேறு போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் சம்பு எல்லையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 3 நாட்களாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகவும், கலவரம் நிறைந்தும் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சியான் சிங் திடீரென உயிரிழந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போராட்ட களத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, சியான் சிங் அங்கிருந்த விவசாயிகளிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சியான் சிங் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று(பிப்.16) உயிரிழந்தார். இந்தச் சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், விவாசயிகள் போராட்டத்தில் பங்கேற்று உயிரிழிந்த சியான் சிங்கின் உடல் போராட்டக் களத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விவசாயிகள் மரியாதை செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக போலீசார் மற்றும் விவசாயிகளுக்கிடையே வெடித்த கலவரத்தில், இரு தரப்பிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அம்பாலா பகுதியைச் சேர்ந்த ஏஎஸ்பி பூஜா தப்லா கூறுகையில், "விவசாயிகளின் போராட்டத்தில் 18ஹரியானா போலீசாரும், 7பாரா ராணுவ வீரர்கள் என பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 25போலீசார் காயமடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து வந்த போராட்டத்தில், தற்போது கலவரம் மற்ற சூழலே நிலவி வருகின்றது" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஊரப்பாக்கம் பகுதிவாசிகளே உஷார்.. தப்பியோடிய அனுமன் குரங்குகளை பிடிக்கும் முயற்சியில் ஊழியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.