ETV Bharat / bharat

டெல்லி மதுபான கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்! - Delhi CM Arvind Kejriwal got bail

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 16, 2024, 12:11 PM IST

Updated : Apr 3, 2024, 3:35 PM IST

Etv Bharat
Etv Bharat

Arvind Kejriwal Bail: டெல்லி கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

டெல்லி : தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவருக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏறத்தாழ 8 முறை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அதை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்து வந்தார். இது தொடர்பாக இரண்டு முறை நீதிமன்றத்தில் புகார் அளித்த அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடும்படி கோரியது.

இதையடுத்து மார்ச் 17ஆம் தேதிக்கு முன்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு டெல்லி நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், டெல்லி ரோஸ் அவன்யூவில் உள்ள கூடுதல் தலைமை நீதிபதி மாஜிஸ்திரேட் முன்னிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானார். அப்போது அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை தடுக்க ஜாமீன் வழங்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி 15 ஆயிரம் ஜாமீன் பத்திரம் மற்றும் 1 லட்ச ரூபாய் பிணை வழங்க உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார். கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லியில் கலால் வரி கொள்கை வகுத்ததில் தனியார் நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் முறைகேடு நடந்ததாக கூறி டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படிடையில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சத்தியேந்திர ஜெயின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏறத்தாழ 8 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு முறை அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடிய நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அதேநேரம், இந்த வழக்கில் தெலங்கானா எம்எல்சி கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், நேற்று (மார்ச்.15) அவரது ஐதராபாத் இல்லத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவுக்கு பின்னர் கவிதாவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டெல்லி கலால் வரி முறைகேடு வழக்கு: பிஆர்எஸ் எம்எல்சி கவிதா கைது!

Last Updated :Apr 3, 2024, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.