ETV Bharat / bharat

பாபரில் இருந்து மோடி வரை.. அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 9:20 PM IST

Ayodhya Ramar Temple history in tamil: அயோத்தியில் கட்டப்பட்டு இன்று (ஜனவரி 22) கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள ராமர் கோயில் கடந்து வந்த பாதையை இந்த செய்தித் தொகுப்பில் ஆண்டு வாரியாக காணலாம்..

அயோத்தி ராமர் கோயில் வரலாறு
ayodhya ram temple history in tamil

சென்னை: உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், இன்று பாலகன் ராமர் சிலையின் பிரான் பிரதிஷ்டை நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சாதுக்கள், ஆன்மீக குருக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இவ்வாறு மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள ராமர் கோயிலின் வரலாற்றுத் தடங்கள் பல வலிகளையும், போராட்டங்களையும், கலவரங்களையும் கொண்டது.

1526: இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முகலாய மன்னர் பாபர் முதலாம் பனிபட் போரில் இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்து வட இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தார். இந்த வெற்றியைப் போற்றும் வகையிலும், பாபரின் புகழை நிலைநாட்டும் வகையிலும் அவரது தளபதி ஒரு மசூதியைக் கட்டுவதற்கு முடிவெடுத்தார்.

1528: பாபரின் தளபதி மிர் பாகி என்பவரால் சர்ச்சைக்குரிய இடத்தில் பாபர் மசூதி கட்ட உத்தரவிடப்பட்டது. அந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என இந்து மக்கள் கூறினர். அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டபோது மசூதிக்கு வெளியே வளாகத்தினுள் இந்துக்கள் வழிபடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

1529: மிர் பாகியால் பாபர் மசூதி கட்டப்பட்டது.

1885: பாபர் மசூதியை ஒட்டிய பகுதியில் கோயில் கட்டுவதற்கான அனுமதி கேட்டு முதன் முதலாக மகந்த் ரகுபிர் தாஸ் என்பவர் சட்ட ரீதியாக அணுகினார். ஆனால், பைசாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் அனுமதி மறுத்தது. எனவே, இந்தியாவின் வெளியுறவுச் செயலருக்கு எதிராக மகந்த் பைசாபாத் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவில், பாபர் மசூதியின் முற்றத்தில் கோயில் கட்ட அனுமதி கோரப்பட்டது. ஆனால், இந்த மனுவை பைசாபாத் நீதிமன்றம் ரத்து செய்தது.

1949: டிசம்பர் 22, 1949 அன்று இரவு மசூதிக்கு உள்ளே ராமர் சிலை தோன்றுவதாகக் கூறப்படுகிறது. இதுதான் தெய்வீக வெளிப்பாடு என இந்துக்கள் தெரிவிக்கின்றனர். பலர், இரவில் மசூதிக்குள் கடத்தல் நிகழ்ந்ததாக வாதிடுகின்றனர். அது மட்டுமல்லாமல், இந்துக்கள் வழிபடத் தொடங்குகின்றனர். எனவே, இதனைப் போட்டியிடப்பட்ட பகுதியாக அறிவித்த அரசு, நுழைவாயிலைப் பூட்டுகிறது.

1950: கோபால் சிம்லாவிஹார்டு மற்றும் பரம்ஹன்சா ராமச்சந்திரா தாஸ் ஆகியோர், ராமருக்கு இந்து பூஜைகள் நடத்த அனுமதி கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்கின்றனர். இதனையடுத்து, பூஜைகள் நடத்துவதற்கு அனுமதி அளித்த நீதிமன்றம், மசூதியின் முன்பக்க உட்கதவுகளைப் பூட்டியே வைக்க வேண்டும் எனவும் உத்தரவிடுகிறது.

1959: பாபர் மசூதி கட்டப்பட்ட நிலத்தின் உரிமையை நாடி நிர்மோஹி அகாரா என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவர், மூன்றாவது மனுவைத் தாக்கல் செய்தார்.

1961: உபி வாகாஃப் வாரியம் தரப்பில் பாபர் மசூதிக்கான நில உரிமை கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாபர் மசூதிக்குள் உள்ள ராமர் சிலையை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

1984: விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பால் ராம் ஜென்மபூமி இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் அதன் பிரச்சாரத் தலைவராக பாஜக தலைவர் எல்கே அத்வானி நியமிக்கப்பட்டார்.

1986, பிப்ரவரி 1: பாபர் மசூதியில் உட்புற கேட் திறக்கப்பட்டது. மூன்றாம் தரப்பு வழக்கறிஞரான யுசி பாண்டே, பைசாபாத் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகி, பைசாபாத் மாவட்ட நிர்வாகமே, அது ஒன்றும் நீதிமன்றம் அல்ல, மசூதியின் கதவைப் பூட்டச் சொல்வதற்கு என வாதிட்டார்.

1989, நவம்பர் 9: சர்ச்சைக்குரிய பகுதிக்கு அருகாமையில் கோயில் எழுப்புவதற்கான அடிக்கல் நாட்ட அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அனுமதிப்பு.

1989: பாபர் மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. அதேநேரம், நிர்மோஹி அகாரா மற்றும் வாகாஃப் வாரியம் ஆகியோரின் வழக்குகளைப் பிரதிவாதியாகச் சேர்த்து, ராம் லல்லா விராஜ்மன் என்பவர் வேறு ஒரு வழக்கையும் உயர் நீதிமன்றத்தில் தொடுத்தார்.

1990, செப்டம்பர் 25: குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தி வரையிலான ரத யாத்திரையை எல்கே அத்வானி தொடங்கி வைத்தார்.

1992, டிசம்பர் 6: கரசேவகர்களின் வன்முறைக் கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

1992, டிசம்பர் 16: மசூதி இடிக்கப்பட்ட 10 நாட்களுக்குப் பிறகு, அப்போதைய பிரதமரால் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.லிபர்ஹன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தின் சூழல் மற்றும் வகுப்புவாத கலவரத்தை ஆராய்ந்து அடுத்த 3 மாதங்களுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிடப்பட்டது.

1993, ஜனவரி 7: நரசிம்மராவ் தலைமையிலான அரசு, சர்ச்சைக்குரிய இடத்திற்குச் சொந்தமான 67.7 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுவதற்கான அரசாணையை வெளியிட்டது. பின்னர், இது மத்திய அரசால் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான வசதிக்காக அயோத்தியா விதி 1993-இன் கீழ் சர்ச்சைக்குரிய பகுதியைக் கையகப்படுத்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1993, ஏப்ரல் 3: இஸ்மாயில் ஃபரூக் தாக்கல் செய்த மனு உள்பட பல்வேறு ரிட் மனுக்கள் இந்த சட்டத்தின் அம்சங்களை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டன. பின்னர், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ரிட் மனுக்கள், 139ஏ என்ற விதியின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

1994: அயோத்தியின் புதிய சட்டத்தில் சில பகுதிகளைக் கையகப்படுத்துவதற்கான அரசியலமைப்புச் சட்டத்தை 3:2 என்ற பெரும்பான்மையுடன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பெரும்பான்மை தீர்ப்பு முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா, ஒவ்வொரு மத அசையாச் சொத்துக்களும் கையகப்படுத்தப்பட வேண்டியவை என்று நியாயப்படுத்தினார். மசூதியில் நமாஸ் வழங்குவது இஸ்லாத்தில் எந்த குறிப்பிட்ட முக்கியத்துவத்தையும் கொண்டிருக்காத வரையில், அது இஸ்லாத்தில் ஒருங்கிணைக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு மசூதியை அத்தியாவசியமற்ற வழிபாட்டுத் தலமாகக் கருதி விமர்சிக்கப்பட்டது.

2002, ஏப்ரல்: அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு, அயோத்தி பெயர் விவகாரம் தொடர்பான வழக்கு தொடங்கியது.

2003 மார்ச் - ஆகஸ்ட்: அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்தியத் தொல்லியல் துறையினர், சர்ச்சைக்குரிய இடத்தில் ஆய்வுப் பணியைத் தொடங்கினர். இதில், 10ஆம் நூற்றாண்டின் இந்துக் கோயில் எச்சங்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்தியத் தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை இஸ்லாமியர்கள் கேள்விக்குள்ளாக்கினர்.

2009, ஜூன் 30: 17 வருடங்களுக்குப் பிறகு லிபர்ஹன் ஆணையம் தனது அறிக்கையைப் பிரதமரிடம் சமர்ப்பித்தது.

2010, செப்டம்பர் 30: சர்ச்சைக்குரிய இடத்தை மூன்று தரப்பினருக்கும் உயர் நீதிமன்றம் பிரித்தது. இதன்படி, மூன்றில் ஒரு பகுதி நிர்மோஹி அகராவுக்கும், ஒரு பகுதி வாகாஃப் வாரியத்திற்கும், ஒரு பகுதி ராம் லல்லா விராஜ்மனுக்கு அளிப்பதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. அதேநேரம், இஸ்லாம் மற்றும் இந்து என 2:1 என்ற விகிதத்தின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய நிலம் அளிப்பதாக உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு தீர்ப்பளித்தது.

2011 மே: நீதிபதிகள் அஃப்தம் ஆலம் மற்றும் ஆர்மெம்.லோதா அடங்கிய அமர்வு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. எந்த அமைப்பும் நிலத்தைப் பிரிப்பதற்குக் கோராத நிலையில் அதை எப்படி நிறைவேற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

2017, மே 21: இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கெஹெர் நீதிமன்றத்திற்கு வெளியே இந்த விவகாரத்தில் சமரசமாக முடிவெடுக்க அனைத்து தரப்பினருக்கும் பரிந்துரைத்தார்.

2017, ஆகஸ்ட் 11: நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷன், அப்துல் நசீர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை விசாரிக்கத் துவங்கியது.

2018, பிப்ரவரி - ஜூலை: இஸ்மாயில் ஃபரூக்கி தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

2018, ஜூலை 20: வழக்கைப் பெரிய அமர்வுக்கு மாற்றக்கோரிய மனுவின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

2018, செப்டம்பர் 2: இஸ்மாயில் ஃபரூக்கி தீர்ப்பைப் பெரிய அமர்வு மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், பெரிய அமர்வுக்கு மாற்றக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது.

2019, ஜனவரி 8: அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 2018இல் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து, இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்குப் பட்டியலிட்டார்.

2019, மார்ச் 8: அரசியல் சாசன அமர்வில் ஆட்சேபனை இருந்த போதிலும், நீதிமன்றம் இரண்டு நாள் விசாரணைக்குப் பிறகு மத்தியஸ்தம் செய்ய உத்தரவிட்டது.

2019, டிசம்பர் 12: அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தொடரப்பட்ட மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2020, பிப்ரவரி 5: ராமர் கோயில் கட்டப்படுவதைக் கண்காணிக்க ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த ஷேத்ரா அறக்கட்டளை அமைப்பதற்கான ஒப்புதலை மக்களவையில் பிரதமர் மோடி வெளியிட்டார்.

2020, பிப்ரவரி 24: அயோத்தியின் தன்னிபூர் கிராமத்தில் மசூதி கட்டுவதற்கு அளிக்கப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தி உத்தரபிரதேசம் சன்னி வக்ஃப் வாரியம் ஏற்றுக் கொண்டது.

2020, மார்ச் 25: 28 ஆண்டுகளுக்குப் பிறகு ராம் லல்லாவின் சிலை கூடாரத்தில் இருந்து தற்காலிக கோயிலுக்கு மாற்றப்பட்டு கட்டுமானப்பணிகள் துவங்கியது.

2020, ஆகஸ்ட் 5: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

2023, அக்டோபர் 25: ராமர் கோயில் திறப்பு விழாவிற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராம ஜென்மபூமி அறக்கட்டளை அழைப்பு விடுத்தது.

2024, ஜனவரி 22: கோயில் கட்டுமானத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து, கர்நாடகாவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்த 5 வயதுப் பருவம் கொண்ட ராம் லல்லாவின் 51 அங்குல சிலை கருவறையில் நிறுவப்பட்டது. பிரதமர், உத்திர பிரதேச முதலமைச்சர், ஆளுநர் உட்பட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதையும் படிங்க: ராமரிடம் மன்னிப்பு.. உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி - அயோத்தி விழாவில் பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.