தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் மோதல்; நடந்தது என்ன?

By

Published : Apr 10, 2023, 11:11 AM IST

தமிழ்நாடு மற்றும் புதுவை மீனவர்கள் நடுக்கடலில் தாக்கிக் கொண்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

fishermen attack
தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் மோதல்

தமிழ்நாடு புதுச்சேரி மீனவர்கள் நடுக்கடலில் மோதல்; நடந்தது என்ன?

விழுப்புரம்:மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த இளங்கோ (45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த குப்பன் (48), சுந்தரமூர்த்தி (55), சக்திவேல் (40), சந்துரு (22) மற்றும் 15-க்கும் மேற்பட்டோர் வழக்கம் போல் நேற்று அதிகாலை 3 மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்று உள்ளனர்.

இவர்கள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழ்கடல் பகுதியில் காலை 6 மணிக்கு மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த இடத்திற்கு புதுவை மாநிலத்தை சேர்ந்த வீராம்பட்டினம் மீனவர்கள் மற்றொரு விசைப்படையில் அங்கு வந்துள்ளனர். இந்நிலையில் எக்கியர்குப்பம் மீனவர்கள் அதிக அளவில் மீன்களை பிடித்துள்ளனர்.

இதனைப் பார்த்த வீராம்பட்டினம் மீனவர்கள் ஆத்திரத்துடன் அவர்கள் விசைப்படையில் வைத்திருந்த இரும்பு பைப்புகள் மற்றும் மரத்தடிகளை எடுத்து எதிர்பாராத விதமாக விழுப்புரம் மாவட்டம் எக்கியர்குப்பம் மீனவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த எக்கியர்குப்பம் மீனவர்கள் எதற்காக எங்களை தாக்குகிறார்கள் என்று கேட்டுள்ளனர்.

அப்போது வீராம்பட்டினம் மீனவர்கள் நீங்கள் எங்கள் மீன்பிடி வலைகளை அறுத்து விட்டீர்கள். அதனால் தான் உங்களை அடிக்கின்றோம் என்றும், இனிமேல் எங்களை மீறி உங்களால் கடலில் மீன் பிடிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர். மேலும் மீன்பிடி தடை காலத்தில் உங்களது விசைப்படகுகளை புதுவை துறைமுகத்தில் தான் நிறுத்த வேண்டும். அங்கு வந்தாலும் நாங்கள் உங்களை அடித்து உதைப்போம் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

தற்போது வீரம்பட்டினம் மீனவர்கள் தாக்கியதில் எக்கியர்குப்பத்தை சேர்ந்த சந்துரு என்ற மீனவர் படுகாயம் அடைந்துள்ளார். நடுக்கடலில் வீராம்பட்டினம் மீனவர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து எக்கியர்குப்பம் மீனவர்கள் தங்கள் பகுதி மீனவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து மூன்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களை பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எக்கியர்குப்பம் மீனவர்கள் மரக்காணம் காவல் நிலையம் மற்றும் மீன்வளத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த வந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் இல்லாததால் தான் புதுவை மாநில மீனவர்கள் இது போல் அடிக்கடி எங்களை தாக்குகின்றனர். எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உடனடியாக மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

படுகாயம் அடைந்த சந்துரு மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விழுப்புரம் மாவட்டம் எக்கியர்குப்பம் மீனவர்களை புதுவை மாநில வீராம்பட்டினம் மீனவர்கள் நடுக்கடலில் தாக்கிய சம்பவம் இப்பகுதி மீனவர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: மதுராந்தகம் அருகே திடீரென தடம் புரண்ட சரக்கு ரயில்... 2 மணி நேரம் சேவை பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details