தமிழ்நாடு

tamil nadu

கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு; கெமிக்கல் பேக்ட்ரி உரிமையாளர் கைது!

By

Published : May 16, 2023, 5:33 PM IST

Updated : May 16, 2023, 10:55 PM IST

Liqour

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது. கள்ளசாராய உயிரிழப்புக்கு காரணமான கெமிக்கல் பேக்ட்ரி உரிமையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கள்ளச்சாராயம் குடித்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 15 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 8 பேரும் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இதனிடையே கள்ளச்சாராய உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக கெமிக்கல் பேக்ட்ரி உரிமையாளரை சென்னையில் வைத்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். போலீசாரின் விசாரணையில் மதுரவாயல் பகுதியில் உள்ள விநாயகா எண்டர்பிரைசஸ் என்ற கெமிக்கல் பேக்டரி நடத்தி வரும் இளையநம்பி என்ற நபரிடமிருந்து ஆயிரம் லிட்டர் மெத்தனால் என்ற விஷச்சாராயம் வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த விழுப்புரம் தனிப்படை காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, உயிரிழப்பு காரணம் தொழிற்சாலையில் இருந்து திருடி விற்கப்பட்ட மெத்தனால் எனப்படும் விஷச்சாராயம் தான் என, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் எல்லைக்குட்பட்ட பெருக்கரணை மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

ஆய்வறிக்கையில், இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும், ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதும் தெரியவந்தது. இந்த மெத்தனால் என்ற விஷச்சாராயத்தை ஓதியூரைச் சேர்ந்த சாராய வியாபாரி அமரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில், அவர் முத்து என்பவரிடமிருந்து வாங்கியுள்ளதாகவும், முத்து பாண்டிச்சேரி ஏழுமலை என்பவரிடமிருந்து வாங்கியுள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதுபோல சித்தாமூர், பெருக்கரணை மற்றும் பேரம்பாக்கத்தில் விஷச்சாராயத்தை விற்பனை செய்த 'அமாவாசை' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மது அருந்தியதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவர் ஓதியூர் வேலு, அவர் தம்பி சந்திரன் என்பவரிடமிருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். வேலு என்பவர் 'பனையூர்' ராஜேஷ் என்பவரிடமிருந்து வாங்கியதாக கூறியுள்ளார். இவர் விஷச்சாராயத்தை விளம்பூரை சேர்ந்த விஜி என்பவரிடமிருந்து வாங்கியதாகத் தெரிவித்தார். விளம்பூர் விஜி, விஷச்சாராயத்தை பாண்டிச்சேரி ஏழுமலையிடமிருந்து வாங்கியுள்ளார்.

எனவே சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச்சாராயமும், மரக்காணத்தில் விற்கப்பட்ட விஷச்சாராயமும் ஓரிடத்திலிருந்து வந்தது என புலனாகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 1,40,649 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,39,697 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 37,217 லிட்டர் விஷச்சாராயம் கைப்பற்றப்பட்டு 2,957 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடப்பாண்டு மட்டும் இதுவரை 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, இதுவரை 2,55,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை கடத்த பயன்படுத்தப்பட்ட 69 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 1,077 மோட்டார் வாகனங்கள் இந்த ஆண்டு மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெருமளவு தடுக்கப்பட்டதாலும், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, அண்டை மாநிலங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும், சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், தொழிற்சாலையிலிருந்து, விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்த தொழிற்சாலையிலிருந்து மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது? அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்த தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அயன் பட பாணியில் வயிற்றில் போதைப்பொருள்கள் கடத்தல் - நைஜீரியா பயணி சிக்கியது எப்படி?

Last Updated :May 16, 2023, 10:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details