தமிழ்நாடு

tamil nadu

Trichy Crime: குதிரை பந்தயத்தில் மோதல்? - திருச்சியில் இளைஞர் கொலை..

By

Published : May 26, 2023, 7:59 PM IST

Etv Bharat
Etv Bharat

திருச்சியில் பட்டப்பகலில் இளைஞரை சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்தவர் சண்முகம் (23). இவர் குதிரை பந்தயத்தில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவரின் தந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இவருடைய தாய் ஈஸ்வரி உறையூர் கடைவீதி பஞ்சவர்ண சுவாமி கோயில் தெருவில் வாழைப்பழ வியாபாரம் செய்து பிழைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (மே 26) மதியம் சுமார் 12 மணி அளவில் உறையூர் டாக்கர் ரோடு பகுதியில் சண்முகத்தை நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் ஓட ஓட விரட்டியது. அவர்களிடமிருந்து தப்பிக்க சண்முகம் அந்த பகுதியில் ஓடிச் சென்று ஒரு கடைக்குள் தஞ்சம் புகுந்தார்.

இருந்த போதும் அந்த கும்பல் கடைக்குள் சென்று அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில், சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் உடனடியாக உறையூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா‌ லெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

உடனடியாக கைரேகை தடயவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு அந்த கடையில் இருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சண்முகத்திற்கு குதிரைப் பந்தயத்தில் ஆர்வம் இருப்பதால், பந்தயம் செல்லும் பொழுது சிலருடன் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

அதன் காரணமாக இந்த கொலை நடத்தி இருக்கலாம் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் கொலையாளிகளுக்கு வேறு எதுவும் நோக்கம் உள்ளதா அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், கூடுதல் காவல் துறையினரை சாலையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:டிராலி பேக்கில் ஓட்டல் அதிபர் உடல்.. கேரள காதல் ஜோடி சென்னையில் கைது.. பகீர் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details