தமிழ்நாடு

tamil nadu

மனைவியை வெட்டி கொலை செய்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை

By

Published : Apr 21, 2022, 10:52 PM IST

திருச்சி முசிறி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட காவல் துறை
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட காவல் துறை

திருச்சி: முசிறி அருகேயுள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கட்ராமன் (55). இவரது மனைவி சரஸ்வதி (50). இவர்கள், பாம்பு கரடு என்னும் பகுதியிலுள்ள இவர்களது வயலில் வீடுகட்டி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் திருமணம் ஆன நிலையில் கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். திருமணமான மகள் அவரது கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், வெங்கட்ராமன் வயலிலுள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அவரது அண்ணனுடன் பிரச்னை இருந்து வந்துள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வழக்குத் தொடர்பாக செலவு செய்வதற்கு கடந்தவாரம் ஆடுகளை விற்றபணத்தை வெங்கட்ராமனிடம் அவரது மனைவி சரஸ்வதி கொடுத்துள்ளார்.

மேலும், வழக்குத்தொடர்பாக பணம் தேவைபட்டதால் மனைவியிடம் கறவை மாட்டை விற்று பணம் தருமாறு வெங்கட்ராமன் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சரஸ்வதி மறுப்பு தெரிவித்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கட்ராமன் மனைவி சரஸ்வதியை அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த வெங்கட்ராமன் செய்வதறியாமல் அருகில் இருந்த மரத்தில் ஏறி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அப்போது, அந்த வழியாக ஆடு, மாடுகள் மேய்க்கச் சென்றவர்கள் வெங்கட்ராமன் தூக்கில் சடலமாக கிடப்பதையும், சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும் கண்டு கிராம மக்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தற்கொலை தீர்வல்ல

பின்னர், இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் துறையினருக்குத் தெரியாமல் சடலத்தை எரியூட்ட முடிவுசெய்து இருவரின் உடலையும் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தா.பேட்டை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட காவல் துறை

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற டிஎஸ்பி அருள்மணி, ஆய்வாளர் ராஜேஸ்வரி, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் துறையினர், இருவரின் சடலத்தையும் மீட்டு உடற்கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை மற்றும் தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆசிரியருக்கு டார்ச்சர்!- மூன்று மாணவர்கள் இடைநீக்கம்

ABOUT THE AUTHOR

...view details