தமிழ்நாடு

tamil nadu

திருப்பூரில் 3 மாதங்களில் 12 ஆயிரம் பேரைக் கடித்த தெருநாய்கள்.. அச்சத்தில் பொதுமக்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 11:04 AM IST

Updated : Nov 30, 2023, 12:32 PM IST

Street dogs menace in Tiruppur: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 12 ஆயிரம் பேர், தெருநாய்கள் கடித்துக் குதறியதில் காயம் ஏற்பட்டு திருப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உள்ளனர்.

Street dogs menace in Tiruppur
திருப்பூரில் 3 மாதங்களில் 12 ஆயிரம் பேரைக் கடித்த தெருநாய்கள்.. அச்சத்தில் பொதுமக்கள்!

திருப்பூர் தெரு நாய்கள் பிரச்சனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தெருநாய்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. வீதிகள்தோறும் மிரட்டும் தெருநாய்களால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். வேலைக்குச் செல்பவர்கள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரை நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.

சில இடங்களில் நாய்கள் கடித்துக் குதறியதில் பெரும் காயம் அடைபவர்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த நவ.3ஆம் தேதி ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுமியை 6க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்துக் குதறின. இதில் காயமடைந்த அந்த சிறுமி சிகிச்சைக்குப் பின் மீண்டிருக்கிறார்.

இப்படி தொடரும் தெரு நாய்க்கடியால், திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில், தெருக்களில் நடந்து செல்லவே மக்களிடம் அச்சம் நிலவுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தெருநாய்களால் மிகவும் பயந்து கொண்டே செல்லும் நிலை உள்ளது. காலையில் நடைபயிற்சி செல்பவர்கள் முதல் இரவு தாமதமாக வீட்டிற்குச் செல்பவர்கள் வரை தெருநாய்க்கடியால் அவதிப்படுகின்றனர்.

திருப்பூர் வாலிபாளையம், ராயபுரம், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், பெரிச்சிபாளையம், தென்னம்பாளையம், ராயபுரம், குமார் நகர், பிச்சம்பாளையம் உள்பட மாநகர வீதிகளில் தலா 10க்கும் மேற்பட்ட நாய்கள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், அவினாசி, மடத்துக்குளம் உள்ளிட 9 ஒன்றியங்களில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 3,900 பேர் நாய் கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதேபோல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4,000 பேருக்கும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் 4,300 பேர் என மாவட்டம் முழுவதும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 12,000 பேருக்கு நாய்க் கடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தெருநாய்களைப் பிடித்து குடும்பக் கட்டுப்பாடு செய்யும் பணிகள் நடப்பதாகக் கூறினாலும், அந்த பணிகள் சரியாகச் செய்யாததால் தான் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பகுதி வாரியாகத் தெருநாய்களை பாலின வாரியாக கணக்கெடுத்து, அவற்றுக்கு கருத்தடை செய்வது, அதிகம் பேரைக் கடிக்கின்ற நாய்களைப் பிடித்து பிராணிகள் நல அமைப்புகளைப் பராமரிக்கச் செய்வது போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். இதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:தென்காசியில் அதிரகரிக்கும் ப்ளு காய்ச்சல் தொற்று.. 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

Last Updated : Nov 30, 2023, 12:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details