தமிழ்நாடு

tamil nadu

திட்டம் தீட்டிய கொள்ளையர்கள் - கட்டம் கட்டிய காவல்துறை!

By

Published : Jan 11, 2022, 2:21 PM IST

நாட்டறம்பள்ளி அருகே மிளகாய் பொடி இரும்பு ராடு ஆகியவற்றை வைத்துக்கொண்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 4 இளைஞர்களை நாட்டறம்பள்ளி காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தி, துணை காவல் ஆய்வாளர் முனிரத்தினம் மற்றும் காவலர்கள் நேற்று நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கேத்தாண்டப்பட்டி சஞ்சிவினூர் ஏரிக் கரை அருகே அடையாளம் தெரியாத 3 நபர்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் நாட்றம்பள்ளி காவலர்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்நிலையில், காவலர்களை கண்டதும் அந்த இளைஞர்கள் தப்பி ஓட முயன்றபோது அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் வாணியம்பாடி அருகே அரப்பாண்டகுப்பம் மந்திரி வட்டம் பகுதியை சேர்ந்தவர்களான சக்திவேல் (24), பசுபதி (23), சிக்கணாங்குப்பம் டேங்க் வட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் அபினேஷ் (19) மற்றும் ரமேஷ் (19) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்களை சம்பவ இடத்தில் சோதனை செய்த போது இரும்புராடு, சிறிய கடப்பாரை, மிளகாய்ப்பொடி, ஆகியவை வைத்து கொண்டு இருந்ததால் கூட்டுக் கொள்ளை அடித்த திட்டம் தீட்டிக் கொண்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து நாட்டறம்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் உள்பட 4 பேர் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இவர்களிடமிருந்து இரும்பு ராடு கடப்பாரை மற்றும் மிளகாய் பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:50 லட்சம் தொண்டர்கள்.. டிஜிட்டல் பேரணிக்கு தயாராகும் பாஜக!

ABOUT THE AUTHOR

...view details