தமிழ்நாடு

tamil nadu

வாணியம்பாடி அருகே 2 பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 6 பேர் பலி.. 40க்கு மேற்பட்டோர் படுகாயம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 7:56 AM IST

Updated : Nov 11, 2023, 11:33 AM IST

Vaniyambadi Bus accident: வாணியம்பாடி அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

government bus collided with a private bus near Vaniyambadi
வாணியம்பாடி அருகே 2 பேருந்து மோதி விபத்து

திருப்பத்தூர்:வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிர்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநரான உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை, தனியார் பேருந்து ஓட்டுநரான கோலார் பகுதியைச் சேர்ந்த முகமது நதீம், தனியார் பேருந்தின் கிளீனரான வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது பைரோஸ், சித்தூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், சென்னையை அடையாறு பகுதியைச் சேர்ந்த ராஜு மற்றும் சென்னையைச் சேர்ந்த கிருத்திகா என்ற பெண் ஆகிய 6 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த நபர்களை உடனடியாக மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக அவர்களை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 5 நபர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்ததாகக் கூறப்பட்டது. தற்போது 27 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து சம்பவம் இடத்திற்கு வந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய பேருந்துகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடந்த இடத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், விபத்தில் சிக்கி உயிரிழந்த கிருத்திகா தனது இருகுழந்தைகளுடன் பெங்களூரில் இருந்த சென்னை சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது இரு குழந்தைகளும் படுகாயமடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வலி தாங்க முடியாத குழந்தைகள் தாயைக் கூப்பிட்டபடியே இருந்ததைக் கண்ட பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த வாணியம்பாடி கிராமிய காவல்நிலைய தலைமை காவலர் முரளி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புடைய சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்!

Last Updated :Nov 11, 2023, 11:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details