தமிழ்நாடு

tamil nadu

ஆம்பூர் மணல் கடத்தல் ஆடியோ விவகாரம்.. தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்..!

By

Published : Jul 2, 2023, 11:06 PM IST

ஆம்பூரில் மணல் கடத்தல் நபர்களிடம் பணம் கேட்டதாக ஆடியோ வெளியான நிலையில் தலைமை காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருப்பத்தூர்:தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதிகாரத்தில் இருக்கும் சில நபர்களின் கவனக்குறைவே இத்தகைய சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கக் காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆம்பூர் நகர மற்றும் கிராமிய பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் பாலாற்றில் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வரும் கட்டவாரபல்லி பகுதியைச் சேர்ந்த தலைமைக்காவலர் சீனிவாசன் என்பவர், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்காமல் அவர்களிடம் பணம் கேட்கும் ஆடியோ ஒன்று சமூக வளைதளங்களில் பரவி வைரலாகி வந்தது.

அந்த ஆடியோவில், தலைமைக்காவலர் மணல் கொள்ளையரிடம், பீட் பணம் இன்னும் கொடுக்கவில்லையாமே? என்றும் பீட் பணம் குறைவாக கொடுத்தால் இன்ஸ்பெக்டர் மொத்த வண்டியையும் நிறுத்திவிடுவார் எனவும் காவலர் சீனிவாசன் கறாராகப் பேசும் ஆடியோ வைரலாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி வந்தது.

இதைதொடர்ந்து, மணல் கடத்தலில் ஈடுபடுவோரை தடுக்கும் இடத்தில் இருக்கும் காவல் துறை அதிகாரியே கடத்தலுக்கு உடந்தையாக செயல்படுகிறார் என தலைமைக்காவலர் மீது உயர் அதிகாரிகள் துறை சார்ந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் வலது கையை இழந்ததா 1½ வயது குழந்தை? - நடவடிக்கை என்ன?

அதைத்தொடர்ந்து, ஆம்பூர் நகர தலைமை காவல் அதிகாரி சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டம் மணல் கடத்தல்காரருக்கும், காவலருக்கும் இடையே நடைப்பெற்ற உரையாடல் சம்பந்தமான ஆடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வேகமாக பரவியது.

இந்த ஆடியோவில் சம்பந்தப்பட்ட காவலர் சட்ட ஒழுங்கு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர் மீது துறை ரீதியிலான விசாரணை துவங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் ஆடியோ பதிவில் காவலருடன் பேசிய மணல் கடத்தலில் ஈடுப்பட்ட சுரேந்தர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது ஏற்கனவே 11 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் விலைமதிப்பற்ற இயற்கை வளத்தை அழிக்கும் மணல் கடத்தல் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:பீட் பணம் கொடுக்கலைனா அவ்வளோ தான்..! கொள்ளையரிடம் கறார் காட்டிய தலைமைக் காவலர்

ABOUT THE AUTHOR

...view details