தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய 440-வது ஆண்டு பெருவிழா - நற்கருணை ஆசிர் பவனி கோலாகலம்!

By

Published : Aug 1, 2022, 9:16 AM IST

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய 440 வது ஆண்டு பெருவிழா - நற்கருணை ஆசிர் பவனி கோலாகலம்!

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 440-வது ஆண்டு பெருவிழாவின் ஆறாவது நாளான இன்று, நற்கருணை ஆசிர் பவனி கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடி:தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களில் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். ‘ஏழுகடல்துறை அடைக்கலத்தாய்’ என்று அழைக்கப்படும் தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத்தின் 440-ஆம் ஆண்டு பெருவிழா, கடந்த ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திவ்விய நற்கருணை பவனி விழா,கோலாகலமாக நடைபெற்றது. காலை 5 மணி முதல் திருப்பலியுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், திருயாத்திரை திருப்பலி மற்றும் புதுநன்மை வழங்கும் விழா நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இரவு தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்ற திவ்விய நற்கருணை பவனி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நற்கருணை பவனியை முன்னிட்டு பனிமய மாதா தேவாலயத்தின் நற்கருணைப் பேழையானது, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இன்னிசை கீதங்கள் இசைக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய 440 வது ஆண்டு பெருவிழா - நற்கருணை ஆசிர் பவனி கோலாகலம்!

ஆலய வளாகத்திலிருந்து புறப்பட்ட திவ்விய நற்கருணை பவனி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பனிமய மாதா பேராலயத்தை வந்தடைந்தது. பின்னர் திவ்விய நற்கருணை பேழையானது, ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு ஆயர் மேதகு ஸ்டீபன் தலைமையில் நற்கருனை ஆசிர் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி பனிமய மாதா பேராலய பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில், பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. சிறப்பு பெருவிழா திருப்பலியும் மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பேரருள் பன்னீர்செல்வம் தலைமையில் மாலை திருப்பலியும், ஆயர் இவோன் அம்ப்ரோஸ் மற்றும் ஆயர் அந்தோணிசாமி ஆகியோரின் தலைமையிலான திருப்பலியுடன் நிறைவு பெறுகிறது.

தொடர்ந்து அன்றிரவு நகர வீதிகளில் பனிமய மாதாவின் திருவுருவ பவனியும் நடைபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு பனிமய மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவினை குறித்து சலேசியஸ் கூறுகையில், “ஆறாம் திருநாளான இன்று நற்கருணை நடைபெற்றது. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் திருவிழாவிற்கு வருவர் என கூறினார்.

பின்னர் இதுகுறித்து சேவியர் கூறுகையில், ‘ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் திருவிழாவில் பங்கு கொள்வர். கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு வருடம் பக்தர்களின்றி திருவிழா நடைபெற்றது. இந்த வருடம் அனைத்து மக்களும் பங்கேற்றனர். பனிமய மாதா அன்னையின் அருள் அனைவருக்கு கிடைக்கும்” என கூறினார்.

இதையும் படிங்க:தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் 440ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றம்:ஏராளமானோர் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details