தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடியில் கனமழை; ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீர்.. 80 சதவீத நீர்தேக்கம் இல்லை என மேயர் தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 11:35 AM IST

Thoothukudi rain: தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்த காரணத்தால், அநேக இடங்களில் தண்ணீர் தேக்கத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Rain issue
கனமழை எதிரொலி

தூத்துக்குடியில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீர்

தூத்துக்குடி: குமரிக் கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு - மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (நவ.22) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், புதன்கிழமை காலை முதல் வியாழன் அதிகாலை வரை அதிகபட்சமாக திருச்செந்தூர் பகுதியில் 88 மில்லி மீட்டர் மழையும், கழுகுமலை பகுதியில் 87 மில்லி மீட்டர் மழையும், காயல்பட்டிணம் பகுதியில் 103 மில்லி மீட்டர் மழையும், விளாத்திக்குளம் பகுதியில் 83 மில்லி மீட்டர் மழையும், தூத்துக்குடியில் 30.30 மில்லி மீட்டர் என சராசரியாக மாவட்டம் முழுவதும் 44.53 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

மேலும், தூத்துக்குடி நகரில் உள்ள தமிழ்ச்சாலை ரோடு, ரயில்வே நிலையம் செல்லும் சாலை, ரயில்வே தண்டவாளம், வஉசி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் மழைநீரானது சாலை ஓரங்களில் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், உயர் கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் எனவும், அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடியில் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.

இது குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் கூறுகையில், “தூத்துக்குடி மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. பல இடங்களில் 80 சதவீத தண்ணீர் தேக்கம் இல்லை. மேலும், தண்ணீர் கட்டக்கூடிய இடங்களில் வடிகால் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் வராதபடி, மெடிக்கல் கேம்ப் போடப்பட்டுள்ளது. ஆகவே, தூத்துக்குடி மாநகரில் எந்த பிரச்னையும் இல்லை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஈரோடு பிச்சைக்காரன் பள்ளம் ஓடை பாதிப்பு; ரூ.7 கோடி மதிப்பில் புதிய திட்டத்திற்கு பரிந்துரை - அமைச்சர் முத்துசாமி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details