தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடி வெள்ள பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 3:51 PM IST

Thoothukudi flood CM MK Stalin Inspected: வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியை இன்று (டிச.21) நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், வெள்ளத்தால் சேதமடைந்த இடங்களைப் பார்வையிட்டு, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, நிவாரண உதவிகளை வழங்கினார்.

Chief Minister Stalin inspected the flood affected areas in thoothukudi
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி:தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வந்த அதி கனமழை காரணமாகத் தூத்துக்குடி நகரமே தண்ணீரால் சூழப்பட்டுத் தனித் தீவானது. இந்த நிலையில், இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று (டிச.21) தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் கீதா ஜீவன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஆகியோர் முதலமைச்சரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, அந்தோனியார்புரம், மறவன் மடம் உள்ளிட்ட பகுதியில், பாதிப்புக்கு உள்ளான பொது மக்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது பொதுமக்கள் முதலமைச்சரிடம் கூறுகையில், “வருடந்தோறும் இப்பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு முழுமையான தீர்வு வேண்டும். இங்கு முக்கியத் தொழிலாகப் பனை மரத் தொழில் தான் பிரதானம். அந்த பனை மரமும் முற்றிலும் உடைந்து, விழுந்து நாசமாகின” என்றனர். இதைக் கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தமிழ் சாலையில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களையும் நேரில் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பிரையண்ட் நகர், அண்ணாநகர், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை காரில் இருந்தவாறே முதலமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர், குறிஞ்சி நகரில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை காரில் இருந்து இறங்கிப் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதையடுத்து, நெல்லையில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட காரில் கிளம்பிச் சென்றார். உடன், ஏ.டி.ஜி.பி சந்தீப் மிட்டல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உட்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.

இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பயன்படுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை!

ABOUT THE AUTHOR

...view details