தமிழ்நாடு

tamil nadu

விரைவில் 2,000க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 12:13 PM IST

Teachers appointment: தமிழகத்தில் விரைவில் பள்ளிக்கல்வித்துறை மூலமாக 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன எனவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Teachers appointment
அன்பில் மகேஷ் ஆய்வு

அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடி: கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ‘105 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளி வளாகத்தில், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. 100 ஆண்டுகளைக் கடந்து உள்ள பள்ளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.25 கோடி தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை எடுத்து உள்ளார்.

நான் பார்த்த பள்ளிகளிலே மிகப்பெரிய அளவு வளாகம் கொண்டது, கோவில்பட்டி பள்ளிதான். இங்கு ஹாக்கியின் தந்தை என்று அழைக்கப்படும் தயான் சந்த் வந்து, தங்கி இருந்து பயிற்சி அளித்து உள்ளார் என்பது பெருமை வாய்ந்த விஷயம். அடுத்த ஆண்டில் 100 ஆண்டுகளைக் கடந்த பள்ளிகள் பட்டியலில் வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளியில் மழைக்காலத்தில் சில இடங்களில் தண்ணீர் உள்ளே வருகிறது என்று கூறியுள்ளனர். அதனையும் இங்குள்ள திறந்தவெளி கலையரங்கத்தையும் அடுத்த ஆண்டு சீர் செய்யப்படும். எத்தனை ஆசிரியர் சங்கங்கள் இருந்தாலும், அத்தனைக்கும் தலைவர் நான்தான். எங்களுடைய ஆசிரியர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். அவர்களை எப்படி பக்குவப்படுத்தி வேலை வாங்குவது என்றும் தெரியும்.

NCERT பாடத் திட்டத்தில் இந்தியா என்ற பெயரை பாரத் என்று போட்டு உள்ளார்கள். அது குறித்த தகவல் எதுவும், எங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. தமிழகத்திற்கு SCERT மாநில கல்விக் கொள்கை என்று நமக்கு உருவாக்கி உள்ளோம். நம்முடைய பண்பாடு, கலாச்சாரம், தமிழ்நாட்டு பிள்ளைகளுக்கு என்ன தேவையோ, நாமே முடிவு செய்து கொள்வோம் என்பதற்காகத்தான் கமிட்டி அமைக்கப்பட்டு, அதற்கான முடிவுகள் வந்து கொண்டு இருக்கிறது. இறுதி அறிக்கை வந்த பிறகு, முதலமைச்சரிடம் தெரிவிப்போம்.

எங்கள் துறையைப் பொறுத்தவரை, நாங்கள் எங்கு நிற்கிறோம் என்பதை தெரிந்து கொண்டால்தான் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும். எங்களுடைய பள்ளி மாணவர்களுக்கு என்ன தேவை என்பதை திட்டமாக தீட்ட முடியும். நாங்களே எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தால், எங்களை நாங்கள் ஏமாற்றிக் கொள்வதுபோல் ஆகும்.

பல நேரங்களில் எங்களை நாங்களே சுய மதிப்பீடு செய்து கொள்வோம். எங்கள் அலுவலர்கள் ஒரு விஷயத்தை மூன்று முறை உறுதி செய்த பின்னர்தான் எங்களிடம் கூறுவார்கள். பழைய காலம்போல் கிடையாது. ஒவ்வொரு கேள்விகளுக்கும் நான் முறையாக பதில் வழங்குகிறேன் என்றால், அதற்கு முக்கிய காரணம் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள்தான்.

தமிழ்நாட்டில் சுமார் 31,000 பள்ளிகளில் 17.5 லட்சம் மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர். இதனை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டைப் பின்பற்றி தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவது பெருமையாக உள்ளது.

சத்துணவில் கோவில்பட்டி கடலை மிட்டாய் சேர்ப்பது தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில், பள்ளிக்கல்வித்துறை சம்பந்தமாக 32 வாக்குறுதிகள் உள்ளன. இதில் 29 வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தி விட்டோம்.

ஆசிரியர்களின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். கண்டிப்பாக நிதி நிலைமைக்கு ஏற்ப, ஒவ்வொன்றும் படிப்படியாக சரி செய்யப்படும். 2012-2013ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. மிக விரைவில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 1,000 பணி இடங்கள் சேர்க்க வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details