திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உள்ளிக்கோட்டை கிராம நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "கரோனா வைரஸ் ஊரடங்கு மூன்று மாதங்களுக்கும் மேலாக அமலில் உள்ளது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, தொழில், விவசாயம் பாதிக்கப்படாமலிருக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வல்லுனர்களுடன் ஆலோசித்து ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துவருகின்றார்.
அதன்படி விவசாயப் பணிகளுக்காக டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் சுமார் 521-நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இந்தாண்டுதான் அதிகபட்சமாக சுமார் 26 லட்சத்து 24 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.