திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் கலந்துகொண்டு தடுப்பு பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் அமைச்சர் காமராஜ்.
அப்போது, திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 576 ஆக உள்ளது. இதில் 163 நபர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜூலை மாதத்திற்கு நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் முழுமையாக கடைகளுக்கு சென்றடைந்துவிட்டது. பத்தாம் தேதி முதல் பொருட்கள் வாங்க மக்கள் கடைகளுக்குச் சென்றால் தயார் நிலையில் இருக்கும்; இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
மத்திய அரசு முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் இரண்டும் சேர்த்து இரண்டு கோடி இரண்டு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியில் விலை கொடுத்து வாங்கிய அரிசியை பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.