தமிழ்நாடு

tamil nadu

ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தரமில்லாத சமையற்கூட கட்டடம்.. வீடியோ வைரல்

By

Published : May 15, 2023, 7:44 PM IST

Etv Bharat

திருவண்ணாமலை மாவட்டம், கிடாம்பாளையம் ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தில் கட்டிய புதிய சமையல் கூடம் தரமில்லாமல் உள்ளதாக பரவும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தரமில்லாத சமையற்கூட கட்டடம்.. வீடியோ வைரல்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த கிடாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தேசிய ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக காலை உணவுத் திட்டப் பயன்பாட்டிற்காக தரமற்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்டடத்தின் தூண்களை கைகளால் உலுக்கியபோது, அதன் கான்கிரீட் துகள்கள் அனைத்தும் கீழே உதிர்ந்து விழுந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பள்ளி கட்டடம் கட்டியதில் ரூ.8 லட்சம் செலவினம் காட்டப்பட்டபோதும், கட்டடத்தின் தரம் கேள்விக்குறியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த கிடாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயப்பன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் (kaalai sitrundi thittam) தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக புதியதாக சமையல் கூடம் கட்டுவதற்காக, தேசிய ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான ஒப்பந்தத்தை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் முனியாண்டி எடுத்து, சமையல் கூடம் கட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த கட்டடம் கட்டுமானப் பணியானது, தூண்கள் அமைக்கப்பட்டு நிற்க‌ வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (மே 14) அப்பகுதி இளைஞர்கள் கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக கைப்பந்து இந்த தூண்களின் மேல் பட்டு தூண்களின் மேலிருந்த சிமென்ட் துகள்கள் உடைந்து கீழே விழுந்ததாகத் தெரியவருகிறது.

இந்த நிலையில், இளைஞர்கள் ஒன்றிணைந்து கான்கிரீட் போடப்பட்டு நிற்க வைக்கப்பட்டிருந்த தூண்களை ஒவ்வொன்றாக அசைத்தபோது, தூண்களில் போடப்பட்டிருந்த கான்கிரீட் துகள்கள் முழுவதும் கீழே கொட்டிய நிலையில் தரமில்லாமல் கான்கிரீட் போடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்கள் அதனை செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை செல்போன்களில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்ளில் சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் சிலர் பதிவிட்ட நிலையில், அவர்கள் மீது கடலாடி காவல் நிலையத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் முனியாண்டி என்பவர் புகார் அளித்ததாகவும், அவர்களை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், தரமில்லாத பள்ளி கட்டடம் கட்டியதோடு, அதனைக் கண்டுபிடித்த இளைஞர்கள் மீது பொய் வழக்குப் போட்டு மிரட்டி வருவதாகவும் அப்பகுதியினர் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆகவே, மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் குழந்தைகளின் பள்ளி கட்டடத்தின் தரத்தை ஆராய்ந்து அவற்றில் முறைகேடு நடந்திருப்பின் சம்பந்தபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு, அங்கு பள்ளி குழந்தைகளுக்கு தரமான கட்டடம் அமைவதையும் உறுதி செய்யவும் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறு குழந்தைகள் படிக்கும் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக சமையல் கூடம் கட்டும் பணியின் கீழ் கட்டடத்தை தரமில்லாமல் கட்டியதும், இவை குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்கள் மீது வழக்குப் போட்டதும் திருவண்ணாமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தஞ்சை உணவு திருவிழாவில் காய்கறியில் விலங்குகள்.. கலக்கிய கல்லூரி மாணவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details